எதுவுமே செய்யவில்லையே.. மத்திய அரசு மீது புதுச்சேரி பாஜக கூட்டணி முதல்வர் ரங்கசாமி கடும் அதிருப்தி!
புதுச்சேரி: புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி அரசின் முதல்வர் ரங்கசாமி, மத்திய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மீது சட்டசபையில் பகிரங்கமாக அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார். புதுச்சேரிக்கு மத்திய பாஜக அரசு எதுவுமே செய்யவில்லை என விரக்தியுடன் பேசியது விவாதத்தை கிளப்பியது
புதுச்சேரி சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது சுயேட்சை எம்.எல்.ஏ.சிவசங்கர் பேசுகையில், மாநிலங்களின் உள் கட்டமைப்புக்கு மத்திய அரசு ரூ1 லட்சம் கோடி வட்டியில்லா கடன் ஒதுக்கி உள்ளது; இதனைப் பெறுவதற்கு புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுத்ததா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் ரங்கசாமி, இந்த திட்டத்தை அறிவித்தது முதல் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தையும் அந்த திட்ட வரம்புக்குள் கொண்டு வர வலியுறுத்துகிறோம். ஆனால் மாநிலங்களுக்குதான் இந்த திட்டம்; யூனியன் பிரதேசத்துக்கு இல்லை என்கிறது மத்திய அரசு என்றார்.
அப்போது குறுக்கிட்ட சுயேட்சை எம்.எல்.ஏ. சிவசங்கர், மத்திய அரசானது ஜம்மு- லடாக் யூனியன் பிரதேசங்களுக்கு இந்த நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதே என சுட்டிக்காட்ட, "நாங்களும் கேட்கத்தான் செய்கிறோம்.. எதுவுமே செய்யவில்லையே" என விரக்தியில் பதிலளித்தார் முதல்வர் ரங்கசாமி.
இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவரான சிவா, புதுச்சேரிக்கு மத்திய அரசு அனைத்தையும் செய்கிறது என்கின்றனர் பாஜகவினர்.. ஆனால் முதல்வர் ரங்கசாமியோ.. மத்திய அரசு எதனையுமே செய்யவில்லை என வருத்தப்படுகிறார் என்றார். இதனை மறுத்த அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரிக்கு சாத்தியமான அனைத்தையும் மத்திய அரசு தந்து கொண்டே இருக்கிறது என்றார்.
இந்த விவாதங்களில் குறுக்கிட்ட திமுக எம்.எல்.ஏ. நாஜிம், பூனைக்குட்டி இப்போதுதான் வெளியே வந்துள்ளது என்றார். இதனைத் தொடர்ந்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மீண்டும் பேசிய முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரி நலனுக்காக மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைக்கிறோம். மத்திய அரசு எங்களுக்கு தந்த பதிலையே சட்டசபையில் தெரிவித்துள்ளேன். கொடுக்கும் இட த்தில் அவர்கள் இருக்கிறார்கள்; நாம் கேட்கும் இடத்தில் இருக்கிறோம் என்று மீண்டும் விரக்தியை வெளிப்படுத்தினார்.












Click it and Unblock the Notifications