புதுச்சேரி பட்ஜெட்: வரும் ஆகஸ்ட் 26ஆம் தேதி தாக்கல் செய்யப்படும்.. முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
புதுச்சேரி: வரும் 26ஆம் தேதி புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உரையுடன் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும் என்றும் அன்று மாலை புதுச்சேரி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் புதுவை முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்துடன் இணைந்து புதுச்சேரிக்கும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வென்று ஆட்சியைப் பிடித்தது.
தேர்தலுக்கு முன்னரே அப்போது இருந்த காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. புதுவையில் அரசு இல்லாததால் மத்திய அரசே நேரடியாகப் புதுவைக்கு 5 மாத இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.

இடைக்கால பட்ஜெட்
தேர்தலுக்குப் பிறகு என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி அமைத்தது. இலாகா ஒதுக்கீட்டில் இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியதால் நீண்ட காலத்திற்குப் பின்னரே அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். மத்திய அரசு நாடாளுமன்றத்தில் ஐந்து மாதங்களான இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே தாக்கல் செய்திருந்தால், புதுச்சேரிக்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்யும் பணிகளில் என்ஆர் காங்கிரஸ் அரசு இறங்கியது.

26ஆம் தேதி பட்ஜெட்
இதற்காக 10,100 கோடி ரூபாய் மதிப்பிலான திட்ட வரையறை தயார் செய்யப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இந்த திட்டவரையறைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக நேற்று தகவல் வெளியானது. இந்நிலையில் புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து முதல்வர் ரங்கசாமி கூறுகையில், "வரும் 26ஆம் தேதி புதுச்சேரி பட்ஜெட்டை தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளோம். துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உரையுடன் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும்.

முதல்வர் ரங்கசாமி
அதைத் தொடர்ந்து காலை 11 மணிக்குத் துணைச் சபாநாயகர் தேர்தல் நடைபெறும். அன்று மாலை புதுச்சேரி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் சட்டசபை எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்" என்றார். நிதித்துறை முதல்வர் ரங்கசாமியிடமே உள்ளதால் பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்யவுள்ளார். என்ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசின் முதல் பட்ஜெட் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா பரவல்
தொடர்ந்து கொரோனா பரவல் குறித்துப் பேசிய அவர், "கொரோனா 3ஆம் அலையைத் தடுக்க தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். மூன்றாவது அலை வரக்கூடாது என இறைவனிடமும் பிரார்த்தனை செய்யுங்கள்" என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications