எம்.எல்.ஏ.க்கள் தொடர் ராஜினாமா- புதுச்சேரியில் நாராயணசாமி அமைச்சரவை கூண்டோடு பதவி விலக முடிவு?
புதுச்சேரி: காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வரும் நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூண்டோடு பதவி விலக உள்ளதாக அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் 4 ஆண்டுகாலத்துக்கும் மேலாக முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பதவியில் இருந்து வருகிறது. புதுவை சட்டசபை தேர்தல் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் புதுவை காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். புதியதாக இன்று எம்.எல்.ஏ. ஜான்குமார் ராஜினாமா செய்தார். இதனால் புதுவை சட்டசபையில் தற்போது ஆளும் காங்கிரஸும் எதிர்க்கட்சிகளும் சமபலத்தில் அதாவது தலா 14 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.
இதனால் புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி அரசு கவிழ்வது ஏறத்தாழ உறுதியாகி உள்ளது. இதனையடுத்து முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூண்டோடு ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பாஜக மிரட்டி ராஜினாமா செய்ய வைப்பதாகவும் அமைச்சர் கந்தசாமி குற்றம்சாட்டியுள்ளார். நாடு சுதந்திரம் அடைந்தது முதல் புதுச்சேரியில் முன்னாள் முதல்வர் என்.ஆர்.ரெங்கசாமி மட்டுமே 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications