விஜய் மக்கள் இயக்க நிர்வாகி புஸ்ஸி ஆனந்துக்கு என்ன ஆச்சு.. வீட்டுக்கே போன முதல்வர்.. புதுச்சேரியில்!
புதுச்சேரி: விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், அவரை வீடு தேடிச் சென்று சந்தித்து நலம் விசாரித்துள்ளார் புதுச்சேரி முதலமைச்சர் ரெங்கசாமி.
ரெங்கசாமியை பார்த்ததும் பழைய பாசத்தில் அவரது காலில் விழுந்து வணங்கி மரியாதை செலுத்தினார் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் தளபதி புஸ்ஸி ஆனந்த்.

லியோ திரைப்படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பதற்காக இரவு பகல் பாராமல் உழைத்த புஸ்ஸி ஆனந்துக்கு 2 நாட்களுக்கு முன்னர் உடல் சோர்வு ஏற்பட்டு மயக்கம் வந்திருக்கிறது. இதையடுத்து சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புஸ்ஸி ஆனந்துக்கு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்தது. இது குறித்து தகவலறிந்து நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளரை பார்ப்பதற்காக பதறிப்போய் மருத்துவமனைக்கே சென்றார்.
ரசிகர்கள் சூழ்ந்துவிடுவார்கள் என்பதால் இந்த தகவலை வெளியே கசியவிடாமல் ஹாஸ்பிடல் விசிட் அடித்தார் விஜய். ஆனால் அப்படியிருந்தும் அவர் மருத்துவமனைக்கு புஸ்ஸி ஆனந்தை பார்க்க வந்த வீடியோ வெளியானது. இந்நிலையில் சிகிச்சை முடிந்து புதுச்சேரியில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பிய புஸ்ஸி ஆனந்தை, புதுச்சேரி முதலமைச்சர் ரெங்கசாமி வீடு தேடிச் சென்று நலம் விசாரித்தார். அப்போது கையோடு புஸ்ஸி ஆனந்த் பெயரில் அர்ச்சனை செய்து பிரசாதம் எடுத்துச் சென்றிருந்த ரெங்கசாமி, அதனை புஸ்ஸி ஆனந்திற்கும் அவரது மனைவிக்கும் கொடுத்து ஆசிர்வாதம் செய்தர்.
அதேபோல் நெற்றியில் திருநீறு பூசி உனக்கு ஒன்றும் ஆகாது எனக் கூறி வாழ்த்தினார். இதனால் நெகிழ்ந்து போன புஸ்ஸி ஆனந்த், புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமி காலில் குடும்பத்துடன் விழுந்து வணங்கி மரியாதை செலுத்தினார். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது உறுதி எனக் கூறப்படும் நிலையில் அவரது மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் என்ற முறையில் புஸ்ஸி ஆனந்த் அரசியல் களத்தில் முக்கிய நபராக பார்க்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications