கிரண்பேடியின் அடாவடித்தனத்தால் புதுச்சேரியின் பொருளாதாரம் பாதிப்பு.. நாராயணசாமி குற்றச்சாட்டு
புதுச்சேரி: ஆளுநர் கிரண்பேடியின் தவறான முடிவால் புதுச்சேரியின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, மறைந்த ஜெ.அன்பழகன் திமுகவின் தூணாக இருந்தவர். குறிப்பாக, திராவிட கொள்கையில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். அவரது மறைவுக்கு டிவிட்டர் பக்கத்தில் ஒரு இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளேன். அவர் என்னோடு நெருங்கி பழங்கியவர். அவரது மறைவு திமுகவுக்கு மிகப்பெரிய இழப்பாகும்.

நேற்றைய தினம் பாஜகவை சேர்ந்தவர்கள் ரெட்டியார்பாளையம் பகுதியில் துணை சபாநாயகர் பாலன் அலுவலகத்துக்கு முன்பாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். அவர்கள் ஊரடங்கு விதிமுறைகளையும், 144 தடை உத்தரவையும் மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மத்திய அரசானது நீட் தேர்வை கொண்டு வரும்போது அதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுத்தோம். மத்திய அரசுக்கு கடிதம் எழுதி, நீட் தேர்வை கொண்டுவருவதன் மூலம் புதுச்சேரியில் கிராமப்புற மாணவர்கள் நீட் தேர்வில் தேர்வு பெறுவதற்கு ஏதுவான சூழல் இருக்காது என்று கூறி இருந்தோம். இருந்தாலும் நீட் தேர்வை மத்திய அரசு திணித்தது. இதுசம்பந்தமாக பல வழக்குகள் நீதிமன்றத்தில் போடப்பட்டுள்ளது. நீட் தேர்வு வந்தபிறகு மருத்துவ படிப்பில் 50 சதவீத இடங்களை எடுத்துக் கொண்டு மீதியுள்ள 50 சதவீத இடத்தை மத்திய அரசுக்கு கொடுக்கிறோம். மாநில அரசை பொறுத்தவரை இடஒதுக்கீடு கடைபிடிக்கிறோம்.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டவர்கள், மழைவாழ் மக்களுக்கு மாநில அரசின் சார்பாக இடஒதுக்கீடு வழங்குகிறோம். ஆனால் மத்திய அரசானது இடஒதுக்கீடு முறையை கடைபிடிக்கவில்லை. ஏற்கனவே, உச்சநீதிமன்றம் கல்வி நிறுவனங்களிலும், வேலைகளிலும் இடஒதுக்கீட்டை மத்திய அரசு முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
இதுசம்பந்தமாக புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் மத்திய அரசு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மலைவாழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய இடஒதுக்கீட்டை கொடுக்காமல் புறக்கணிக்கிறார்கள். அதனை பொதுப்பட்டியலில் சேர்க்கிறார்கள். இதுபந்தமாக புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதுசந்தமாக நானும் சட்டவல்லுநர்களுடன் ஆலோசித்தேன்.

புதுச்சேரி மாநில திராவிடர் கழக தலைவர் வீரமணி எனக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். இதனை பார்க்கும்போது, மத்திய அரசுக்கு நாம் ஒதுக்கிய 50 சதவீத இடங்களில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மலைவாழ் மக்களுக்கு ஒரு இடமும் கூட கொடுக்கவில்லை. இது உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பதாகவும், உதாசீனப்படுத்துவதாகவும் உள்ளது. இது அந்த மக்களுக்கு இழைக்கப்படுகின்ற மிகப்பெரிய அநீதியாகும்.
ஏற்கனவே தமிழக அரசு மத்திய அரசை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது. அதேபோல் திமுக, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் ஓபிசி, எம்பிசி, மலைவாழ் மக்கள் இருக்கின்ற காரணத்தால், அவர்களது உரிமை பாதிக்கப்படக் கூடாது என்று அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவை அழைத்து ஆலோசனை செய்தேன். அந்த மக்களுக்கு இளநிலை மருத்துவம் மற்றும் முதுநிலை மருத்துவ படிப்பில் இடஒதுக்கீட்டு கிடைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளோம். இதன் மூலமாக சமூக நீதி காக்கப்படும். அந்த சமுதாய மக்கள் மேலே வருவதற்கான வாய்ப்பை கொண்டுவர முடியும்.
இன்று உலக அளவில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்திலும் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு வெளி மாநிலத்தில் இருந்து வருபவர்களால் வியாபாரம் பெருகும். இப்போது எல்லையை மூடிவிட்டதால் மற்ற மாநிலங்களில் இருந்து இங்கு வருவோர் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இதனால் வியாபாரம் குறைந்துள்ளது. தமிழகத்தை விட மதுக்களின் விலையை அதிகமாக உயர்த்தியதால் மதுக்கடைகளின் வியாபாரமும் குறைந்துவிட்டது.

நாம் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும், வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும், அரசுக்கு வருமானத்தை கொண்டுவர வேண்டும் என திட்டங்களை போட்டால் அதனை தடுத்து நிறுத்துகிற வேலையை ஆளுநர் கிரண்பேடி பார்த்து கொண்டு இருக்கிறார்கள். வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்கள் மதுகடைக்கு வந்தால் கொரோனா வரும் என ஆளுநர் கூறுகிறார்.
நாம் ஏற்கனவே எல்லையை மூடி உள்ளோம். அண்டை மாவட்டங்களில் இருந்து வருபவர்களை தடுத்து நிறுத்தியுள்ளோம். அப்படி இருந்தாலும் கூட ஆளுநரின் அடாவடி தனத்தால் நம்முடைய வருமானம் பெரிய அளவில் குறைந்துள்ளது. மத்திய அரசுக்கும் கடிதம் எழுதினோம். மார்ச் மாதத்தில் இருந்து இன்று வரை மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை நிறைவேற்ற சொன்னார்கள்.
நாம் செய்தோம். வருமானம் குறைந்துள்ளது, அரசு ஊழியர்களுக்கு ஊதியம் போட வேண்டும். பென் சன்தாரர்களுக்கு பென்ஷன் கொடுக்க வேண்டும். மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும். சாலை போடுவது போன்ற பல திட்டங்களுக்கு நிதியை ஒதுக்குவதற்கு நிதி ஆதாரம் இல்லாமல் செய்ய முடியாது. ரிசர்வ் வங்கியிடம் கடன் வாங்கினால் கூட அதனை திருப்பி கட்ட வேண்டிய நிலையில் உள்ளது. ஆகவே, நாம் சிறிதளவு விலையை குறைத்தால் வியாபாரம் பெருகும்.
அரசுக்கு வருவாய் வரும் என்று சென்னோம். அதற்கு செவிசாய்க்காமல் ஆளுநரின் தவறான முடிவால் இன்று புதுச்சேரியின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வருமானங்கள் அரசுக்கு வராதநிலை ஏற்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் கடன் பெறுவதற்கான நடவடிக்கையை எடுக்க உள்ளோம். குறிப்பாக மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொழிற்சாலைகளுக்கு கடனை தவனை முறையில் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு வங்கிகளுக்கு உத்தரவிட வேண்டும். சிறுகுறு, நடுத்தர தொழில்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலங்களின் வருவாய் பாதிக்கின்ற காரணத்தால் இழப்பீடு செய்ய வேண்டும். விவசாயிகளின் விலைபொருட்களுக்கு விலை உயர்த்தி கொடுக்க வேண்டும். விவசாயிகள் வங்கியில் கடன் பெறுவதற்கான ஏதுவான சூழலை உருவாக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு நிதியுதவிக்கு மாநிலங்களுக்கு உதவ வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தொம்.
ஆனால் மத்திய அரசு ஒரு நபருக்கு தலா 5 கிலோ அரிசி 3 மாதத்துக்கு கொடுப்பதாக ஒரே ஒரு திட்டத்தை அறிவித்ததை தவிர மாநிலங்களுக்கு வேறு எந்த உதவியையும் செய்யவில்லை. கரோனா தொற்று பாதிப்பு சமையத்தில் தேவையான வெண்டிலேட்டர் வாங்கவும், பிபிஇ கிட்ஸ், கவச உடைகள், மாணிட்டர், என் 95 முகக்கவசம், தேவையான மருந்துகள் வாங்கவும், மருத்துவ நிலையங்களின் கட்டமைப்பை சரிசெய்யவும் நிதி கேட்டோம்.
அதற்கும் மத்திய அரசு உதவி செய்யவில்லை. ரூ.995 கோடி கேட்டோம் கொடுக்கவில்லை. புதுச்சேரி மாநிலத்தை பொருத்தவரை கிடைக்க வேண்டிய பாக்கியையும் கொடுக்கவில்லை. இதனால் புதுச்சேரி மாநிலம் மட்டுமல்ல அனைத்து மாநிலங்களும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.
இதற்கு உதவ வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு இருக்கிறது. ரிசர்வ் வங்கியில் இருந்து ரூ.1 லட்சம் கோடி எடுத்து அதில் மாநிலங்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் கரோனா தொற்றை தடுத்து நிறுத்தவும், தேவையான பொருட்கள் வாங்கவும், மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், தேவையான திட்டங்களை நிறைவேற்றவும் மத்திய அரசு உதவ வேண்டும். ஆனால் மத்திய அரசு மாநிலங்களுக்கு உதவ தயாராக இல்லை. இது மிகப்பெரிய வருத்தத்தை தருகிறது என நாராயணசாமி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications