புதுச்சேரியில் கழற்றிவிடும் திமுக...தேர்தல் புறக்கணிப்பு அஸ்திரத்தை கையில் எடுக்கிறது காங்.?
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலில் திமுக கழற்றிவிடுகிறது என்பதை புரிந்து கொண்ட காங்கிரஸ், மாநில அந்தஸ்து முழக்கத்தை முன்வைத்து சட்டசபை தேர்தலையே புறக்கணிப்பது என்கிற பாதையை நோக்கி செல்ல தொடங்குவதாக தெரிகிறது.
தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருந்து வருகிறது. ஆனால் புதுச்சேரியில் திடீரென காங்கிரஸ் கட்சியை கழற்றிவிட்டு தனி வியூகத்தை வகுத்திருக்கிறது திமுக.
தனி வியூகத்தில் திமுக
அத்துடன் திமுகவின் முதல்வர் வேட்பாளராக முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகனை முன்னிறுத்துவதிலும் முனைப்பாக இருக்கிறது திமுக. இதற்கான ஆலோசனை கூட்டத்தையும் அந்த கட்சி நடத்தி இருந்தது.
உட்கட்சி பூசல்
திமுகவின் இந்த தடாலடி நடவடிக்கைகள் காங்கிரஸை வியர்க்க வைத்துவிட்டன. மேலும் திமுகவுடன் என்.ஆர். காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்கலாம் என்கிற தகவலும் ரெக்கை கட்டி பறந்தன. அந்த அளவுக்கு காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் மோசமாக இருக்கிறது என்பதுதான் நிலைமை.
மாநில அந்தஸ்து- தேர்தல் புறக்கணிப்பு
இதனிடையே புதுச்சேரி தேர்தல் களத்தில் தேர்தல் புறக்கணிப்பு தொடர்பான விவாதம் நடந்து வருகிறது. சட்டசபையில் மாநில அந்தஸ்து கோரி தீர்மானம் நிறைவேற்றிய காங்கிரஸ், இதே கோரிக்கைக்காக தேர்தலை புறக்கணிக்குமா? என கேள்வி எழுப்பியிருந்தார்.
காங்கிரஸ் தேர்தலை புறக்கணிக்கும்?
இதை வசமாக பிடித்துக் கொண்டிருக்கும் முதல்வர் நாராயணசாமி, தனிப்பட்ட முறையில் சட்டசபை தேர்தலை புறக்கணிக்கவே எனக்கு விருப்பம். இருந்தபோதும் கட்சி மேலிடத்துடன் கலந்து பேசி அறிவிப்போம். தேர்தல் ஆணையரிடமும் இந்த முடிவை தெரிவிக்க திட்டமிட்டுள்ளோம் என கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.