புதுச்சேரியில் இன்று முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிப்பு.. மதுக்கடைகள் திறக்கவும் அனுமதி
புதுச்சேரியில் இன்று மதுக்கடைகள் திறப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீடிப்பதுடன் சில தளர்வுகளும் அளிக்க முடிவு செய்யப்பட்டது... அதன்படி, இன்று முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.. 38 நாட்களுக்கு பிறகு மதுக்கடைகளும் இன்று திறக்கப்பட்டுள்ளதால் குடிமகன்கள் குஷியில் உள்ளனர்.
புதுச்சேரி அரசியலில் தொடர்ந்து பிரச்சனைகள், சலசலப்புகள் நடந்து வருகின்றன.. இதனால், தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சியில் அம்மாநிலம், கடந்த சில மாதங்களாகவே முழுமையாக ஈடுபடவில்லை.
இந்த அரசியல் கட்சிகளின் மல்லுக்கட்டினால், தொற்று பாதிப்பு பெருகி கொண்டே வந்தது.. அதிலும் 2வது அலை மோசமாக இருந்தது. எனவே, உடனடியாக தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.. ஆனாலும் தொற்று அடங்கவே இல்லை.

பலனில்லை
இதையடுத்து, கடந்த 24-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை முழு ஊரடங்கு போடப்பட்டது.. அப்படி இருந்தும், காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டுமே மதியம் 12 மணி வரை திறக்க அனுமதி தரப்பட்டிருந்தது.. இதற்கும் பலன் கிடைக்கவில்லை.. அதனால், ஜுன் 1 முதல் 7 வரை மறுபடியும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

ரங்கசாமி
இந்த ஊரடங்கு நேற்றுடன் முடிவடைந்தது.. இதனால், அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக முதல்வர் ரங்கசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.. ஊரடங்கை மேலும் ஒரு வாரத்துக்கு நீடிப்பதுடன் சில தளர்வுகளும் அளிக்க முடிவு செய்யப்பட்டது.

விதிகள்
அதன்படி எல்லா கடைகளும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காய்கறி மற்றும் பழக்கடைகள் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம்... ஹோட்டல்களில் மாலை 5 மணி வரை பார்சல் வினியோகம் செய்யலாம்.. பெரிய மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளும் வழக்கம்போல் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா விதிகளைப் பின்பற்றி செயல்பட வேண்டும்.

சரக்கு போக்குவரத்து
எல்லா தனியார் ஆபீஸ்களும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம்... சரக்கு போக்குவரத்துக்கு அனுமதி அளிப்பதுடன் பொது போக்குவரத்துக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது... அரசு மற்றும் தனியார் பஸ்கள் மாலை 5 மணி வரை இயக்க அனுமதி அளிக்கப்படுகிறது. ஆட்டோ, கார்களும் இயங்கலாம்...

தொழிற்சாலைகள்
கடற்கரை சாலையில் காலை 5 மணி முதல் காலை 9 மணி வரை வாக்கிங செல்ல அனுமதிக்கப்படும்... அங்கு நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்... கண்டிப்பாக மாஸ்க் அணிந்து செல்லவேண்டும்.. அதேபோல, எல்லா வழிபாட்டு தலங்களும் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள் செயல்பட பல்வேறு வழிமுறைகள் காட்டப்பட்டுள்ளது... இந்த உத்தரவு வரும் 14-ம் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும்.

மதுக்கடைகள்
ஊரடங்கில் அளிக்கப்பட்ட தளர்வுகளின்படி இன்று முதல் சாராயம், கள், மதுக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.. ஆனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சாராயம், கள், மதுக்கடைகள் செயல்படலாம். அதே நேரத்தில் மது பார்களை திறக்க அனுமதி இல்லை.. இதற்கான உத்தரவை அரசு செயலாளர் அசோக்குமார் பிறப்பித்துள்ளார்.. மதுக்கடைகள் இல்லாமல், புதுச்சேரி குடிமகன்கள் 38 நாட்கள் தவித்து போயிருந்தனர்.. இப்போது நீண்ட நாட்களுக்கு பிறகு மதுக்கடைகள் இன்று திறக்கப்பட இருப்பதால், செம குஷியில் இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications