என் மக சொல்லிக் கொடுத்தா பாஸ் ஆயிட்டேன்.. எங்கப்பாவை டிகிரி படிக்க வைப்பேன்.. ஆஹா அப்பா, மகள்!
புதுச்சேரி: புதுச்சேரியும், அப்பாவும், மகளும் பத்தாவது வகுப்புத் தேர்வை ஒன்றாக எழுதி பாஸ் ஆகி அசத்தியுள்ளனர்.
புதுச்சேரி அருகே கூடப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் (46). இவர் புதுச்சேரி அரசின் பொதுப்பணித்துறையில் கள ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். சுப்ரமணியனுக்கு பணியில் நீண்ட அனுபவம் இருந்தும் 7 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்ததால் இவரால் தன் துறையில் பதவி உயர்வு பெற முடியாமல் இருந்தது.
இதனால் படித்து பதவி உயர்வு பெற வேண்டும் என்ற லட்சியத்தோடு கடந்த 2017 ஆம் ஆண்டு டுடோரியல் சென்டரில் சேர்ந்து 8 ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். அதன்பின் கடந்த 2018 ம் ஆண்டு மார்ச் மாதம் முதன் முதலில் 10 ம் வகுப்பு தேர்வு எழுதினார். அதில் அறிவியல், சமூக அறிவியல் பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெற்றார். மற்ற 3 பாடங்களில் தோல்வி அடைந்தார்.
மனம் தளராத முயற்சி
பின்னர் தொடர் முயற்சியால் ஜூன் மாதம் நடந்த துணை தேர்வில் 3 பாடங்கள் எழுதினார். இதில் தமிழ் பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெற்றார். அதன்பின் செப்டம்பர் மாதம் ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களுக்கான தேர்வை எழுதினார். அப்போது தோல்வி அடைந்தார். ஆனாலும் தொடர் தோல்வியைக் கண்டு மனம் தளராத சுப்பிரமணியன், கடந்த மார்ச் மாதம் இதே பாடங்களுக்கான தேர்வு எழுதினார்.
அப்பாவும், மகளும்
இங்குதான் டிவிஸ்ட். இவரது மகள் திரிகுணாவும் இப்போது பத்தாவது வகுப்பு வந்து விட்டார். தந்தையும், மகளுமாக பரீட்சையை எழுதினர்.
நேரத்தில் அவருடைய மகள் திரிகுணாவும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்வு எழுதினார்.
சூப்பராக பாஸ்
இந்நிலையில் நேற்று முன்தினம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியான நிலையில், சுப்ரமணியனின் மகள் திரிகுணா 471 மதிப்பெண்கள் எடுத்து பள்ளி அளவில் 2-ம் இடத்தில் தேர்ச்சி பெற்றார். மறுபக்கம் ஆங்கிலம், கணித பாடங்களில் தேர்வு எழுதிய அவரது தந்தை சுப்ரமணியனும் தேர்ச்சி பெற்றார். ஒரே நேரத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தந்தையும், மகளும் தேர்ச்சி பெற்றதற்காக அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
என் மகதான் காரணம்
இதுகுறித்து சுப்பிரமணியன் கூறுகையில், குடும்ப சூழ்நிலை காரணமாக 7 ஆம் வகுப்போடு நின்றுவிட்டதாவும், பின்னர் தந்தையும் இறந்துவிட்டதால், பொதுபணித்துறையில் அவர் செய்துவந்த பணி தனக்கு கிடைத்ததாகவும், பணியில் நீண்ட அனுபவம் இருந்தாலும், கல்வித் தகுதி குறைவாக இருந்ததால் பணி உயர்வு கிடைக்காமல் போனதாகவும், தற்போது தன் மகளின் முயற்சியால் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுவிட்டதாக பெருமையாக சொல்கிறார் சுப்பிரமணியன்.
பெருமையா இருக்கு
சுப்ரமணியனின் மகள் திரிகுணா கூறுகையில், சிறு வயதில் என் தந்தைதான் எனக்கு, அ,ஆ,இ,ஈ எழுத கற்றுகொடுத்தார். தற்போது அவர் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறுவதற்கு நானும் ஒரு காரணமாக இருந்ததை நினைக்கும் போது மிகவும் பெருமையாக உள்ளது. பொதுவாக பிள்ளைகளை படிக்கவைத்து பெற்றோர்கள்தானா பெருமைகொள்வார்கள்.
டிகிரி படிக்க வைப்பேன்
ஆனால் எங்கள் குடும்பத்தில் நாங்கள் எங்க அப்பாவை படிக்கவைத்து வைத்து பெருமைப்படுகிறோம். பத்தாம் வகுப்பு மட்டுமல்லாமல் பதினொன்றாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுத வைத்து அப்பாவை டிகிரி வரை படிக்க வழங்கப்போவதாக மகிழ்ச்சிபொங்க கூறுகிறார் திரிகுணா.
தன் தந்தைக்கு ஒரு சிறந்த ஆசானாக இருந்து, அவருக்கு கல்வி போதித்து பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற வைத்துள்ள திரிகுணாவின் செயல் மிகவும் பாராட்டுகுரியதே.