முதல்வர் விஜய்யை கோழை, ஊழல்வாதி என்று பதிவிட்ட வன்னியரசு இன்று அமைச்சர்.. பாஜக கிண்டல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் வன்னி அரசு அவர்களே, முதலில் அமைச்சரானதிற்கு வாழ்த்துக்கள். கடந்த பிப்ரவரியில் விஜய் அவர்களை ஊழல்வாதி என்று பக்கம் பக்கமாக அறிக்கை விட்டீர்கள். அந்தப் பதிவின் இறுதியில் நடிகர் விஜய்யின் ஊழல் கதை தொடரும் என்றும் சீறியிருந்தீர்கள். ஆனால் இன்று அதே திரு.விஜய் அவர்களின் அமைச்சரவையில் பவ்யமாக மந்திரி பதவியை ஏற்றுள்ளீர்கள்! அமைச்சர் பதவி கிடைத்தவுடன் அந்த ஊழல் குற்றச்சாட்டுகள் எல்லாம் காற்றில் பறந்துவிட்டதா? இப்போது மக்கள் கேட்கிறார்கள்... இனியும் திரு.விஜய் அவர்களின் ஊழல்களைப் பற்றி எழுதுவீர்களா? என்று பாஜக இளைஞரணி மாநில தலைவர் எஸ்ஜி சூர்யா கேள்வி எழுப்பி உள்ளார்.

முன்னதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளரும், திண்டிவனம் தொகுதி எம்எல்ஏவுமான வன்னியரசு கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி, தவெக தலைவரும், தமிழகத்தின் முதல்வருமான விஜய் குறித்து கடுமையான ஊழல் குற்றச்சாட்டை கூறியிருந்தார். அந்த பதிவில் வன்னியரசு கூறுகையில், 'குட்டி ஸ்டோரி' புகழ் நடிகர் விஜய்யின் ஊழல் ஸ்டோரி! 'பிகில்' பட வருமானம் தொடர்பாக 5.2.2020ல் நடிகர் விஜயின் பனையூர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அப்போது அவர் 'மாஸ்டர்' பட ஒளிப்பதிவில் நெய்வேலியில் இருந்ததால், அங்கிருந்து சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து வரப்பட்டு விசாரிக்கப்பட்டார்.

Vanniyarasu who once posted that CM Vijay was a coward is today a Minister BJP Mocks

இந்த சோதனையின்போது '[email protected]' என்ற ஒரே Apple IDல் நடிகர் விஜய் பயன்படுத்தி வந்த Apple IPhoneX மற்றும் lPAD Pro சாதனங்களை கைப்பற்றி வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அந்த சாதனங்களில் இருந்த தரவுகளில் ஒன்று, வேறொரு Samsung மொபைலில் குறிப்புகள் எழுத்தப்பட்டிருந்த ஒரு படத்தை தனது IPhone மூலம் 18.11.2017 அன்று எடுத்த புகைப்படம். இதில் இருந்த தரவுகளின் அடிப்படையில் விரிவான கேள்விகளை கேட்டு விஜய்க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அதிகாரிகள் அனுப்பிய முதல் நோட்டீசுக்கு 6.2.2020ல் விஜய் அளித்த பதில், "இது எனது மொபைலில் எடுக்கப்பட்ட பிரிண்ட் அவுட் தான். நான் முதலீடு செய்துள்ள நிலங்கள் பற்றிய தரவு அதில் உள்ளது. தி.நகர் பாண்டி பஜாரில் மூன்றரை கிரவுண்டில் ரூ.23 கோடி, பனையூர் 3வது அவென்யூ மூன்று கிரவுண்டில் ரூ.6.5 கோடி, நீலாங்கரை Kazura Garden 4 கிரவுண்டில் ரூ.5 கோடி, 2127 சதுர அடியில் அடையார் அலுவலக ஃபிளாட்டில் ரூ.2 கோடி, படூர் 2 ஏக்கர் 65 செண்ட் நிலத்தில் ரூ.15.5 கோடி ஆகிய தரவுகள் உள்ளன. அதிலுள்ள மற்ற நில முதலீடுகள் குறித்து உடனடியாக நியாபகத்தில் இல்லை. ஒரு வார காலத்திற்குள் அந்த விவரங்களை அளிக்கிறேன்'என்றார்.

நடிகர் விஜயின் மொபைலிலிருந்து அதிகாரிகள் கைப்பற்றிய அந்த படத்தில், விஜய் வாங்கிய சொத்துக்களின் விவரம், அதன் மதிப்பு மற்றும் அவை வாங்கப்பட்ட தேதி ஆகியவை குறிப்பிடப்பட்டிருந்தது.

5 அசையா சொத்துக்களில் மொத்தம் ரூ.52 கோடியை முதலீடு செய்துள்ளதாக விஜய் ஒப்புக்கொண்டதன் அடிப்படையிலும், ஒரு வாரத்திற்குள் விஜய் சமர்ப்பித்த மற்ற சொத்து முதலீடுகளையும் ஆராய்ந்ததில் பல முரண்பாடுகளை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். கைப்பற்றப்பட்ட படத்தில் குறிப்பிடப்பட்ட சொத்தின் மதிப்பைவிட அந்த சொத்து ஆவணத்தில் உள்ள மதிப்பு குறைவாக இருந்துள்ளது.

அதாவது தி.நகரில் உள்ள நிலம் மற்றும் கட்டிடத்தை 11.12.2014 அன்று ரூ.16 கோடிக்கு வாங்கியதாக சொத்து ஆவணம் சொல்கிறது. ஆனால், விஜயின் மொபைலில் கைப்பற்றப்பட்ட குறிப்பில் அந்த சொத்தின் மதிப்பு ரூ.23 கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டுக்கும் ரூ.7 கோடி வித்தியாசம்.

இதே போன்று ஆவணங்களின்படி விஜய் வாங்கிய 4 சொத்துகளின் மதிப்பு ரூ.33 கோடி என்று இருந்தாலும், கைப்பற்றப்பட்ட குறிப்பில் அவற்றின் மதிப்பு ரூ.50 கோடியாக எழுதப்பட்டிருந்தது. ஆக ரூ.16 கோடிக்கு விஜயிடம் எந்த கணக்கும் இல்லை என்பது தான் வருமான வரித்துறையினரின் குற்றச்சாட்டு. இந்த முரண்பாடு குறித்து அதிகாரிகள் அனுப்பிய இரண்டாவது நோட்டீசுக்கு 12.3.20ல் நடிகர் விஜய் இப்படி பதில் அளித்தார்..

"சொத்துக்களை வாங்குவதற்காக கேட்டபோது அதன் உரிமையாளர்கள் சொன்ன முதற்கட்ட விலையை தான் கைப்பற்றப்பட்ட குறிப்பில் நான் எழுதியுள்ளேன். உரிமையாளர்களிடம் எனது குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி முதற்கட்ட விலையிலிருந்து குறைத்து வாங்குவர். அந்த விலையை நான் பிறகு குறிப்பில் எழுதவில்லை" என்றார்.

முதல் நோட்டீசுக்கும் இரண்டாவது நோட்டீசுக்கும் சுமார் ஒரு மாதம் இடைவெளி என்பதால் விஜயின் பதிலை முன்னரே கணித்திருந்த அதிகாரிகள், இரண்டாவது நோட்டீசில் இன்னொரு கேள்வியையும் கேட்டிருந்தனர்..

'கைப்பற்றப்பட்ட குறிப்பில் 2016ல் வாங்கப்பட்ட பொதூர் சொத்தின் மதிப்பு ரூ.15.50 கோடி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த குறிப்பை 2016ல் தான் நீங்கள் எழுதியிருக்க முடியும். தி.நகர் சொத்து 2014லும், நீலாங்கரை Kazura Garden சொத்து 2013லும் வாங்கப்பட்டன. ஆனால் 2016ல் பொதூர் சொத்து குறித்து எழுதும்போது ஏற்கனவே வாங்கப்பட்டிருந்த சொத்துக்களின் உண்மையான மதிப்பு திருத்தப்படாமல், ஏன் சொத்தின் ஆஃபர் விலையையே குறிப்பிட்டுள்ளீர்கள்?'

திரைப்படங்களில் கருப்புப் பண வில்லன்கள் அளிக்கும் வழக்கமான பதிலை தான் ஹீரோ விஜய் இதற்கும் அளித்தார் - 'அந்த சொத்துக்கள் ஏற்கனவே வாங்கப்பட்டுவிட்டதால், அவற்றின் விலையை குறிப்பில் திருத்துவதற்கு மறந்து போயிருப்பேன்' என்பதே அந்த பதில்.

முதல் நோட்டீசுக்கு அளித்த பதிலில், கைப்பற்றப்பட்ட குறிப்பில் இருப்பது முதலீட்டு செய்த சொத்துக்களின் மதிப்பு என்று பதிலளித்தார் விஜய். ஒரு மாதத்துக்கு பின்னர் இரண்டாவது நோட்டீசுக்கான பதிலில், அவை சொத்துக்களின் மதிப்பு அல்ல, அவற்றை வாங்குவதற்கு முன்னர் பெறப்பட்ட முதற்கட்ட விலை என்று பல்டி அடித்தார்.

இதனை மறுத்து, விஜயின் அலுவலகம் இயங்கிவரும் அடையாறு ஃபோர் சீசன்ஸ் வீட்டை 2007ல் ரூ.1.45 கோடிக்கு வாங்கப்பட்டதாக சொத்து ஆவணம் சொல்கிறது. ஆனால், விஜய் தனது மொபைலில் எழுதி வைத்திருந்த குறிப்பில் அதன் விலை ரூ.2 கோடி எனக் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் 2007ல் வாங்கிய சொத்தின் விலையை கூட குறித்து வைத்துள்ளார் விஜய் என்பது தெளிவாகிறது. ஆஃபர் விலையை தான் குறித்துள்ளேன், வாங்கிய சொத்தின் மதிப்பு அல்ல என விஜய் சொல்வது ஏற்க முடியாது. விஜய் எழுதி வைத்துள்ளது தான் அந்த சொத்துக்களின் உண்மையான மதிப்பு என்று அமலாக்கத்துறை வாதிட்டது.

Unexplained Investment என்ற பெயரில் இந்த தொகையை 2014-15 முதல் 2017-18 வரை அந்தந்த கணக்கீட்டு ஆண்டுகளின் வருமானத்தில் சேர்த்தது வருமான வரித்துறை. இதனை எதிர்த்து விஜய் தாக்கல் செய்த மனுவில் அவருக்கு சாதகமாக மேல்முறையீட்டு அதிகாரி தீர்ப்பளித்தார். மேல்முறையீட்டு அதிகாரியின் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் (ITAT) அதிகாரிகள் மேல்முறையீடு செய்தனர். அங்கு தான் மேலே விவரிக்கப்பட்டுள்ள இந்த வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றதாக ஆவணங்கள் கூறுகிறது.

விஜய் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை வருமான வரித்துறை அதிகாரிகள் முழுமையாக விசாரிக்கவில்லை. ஆவணங்களில் கண்டறியப்பட்ட முரண்பாடுகளை மட்டும் வைத்து, சந்தேகத்தின் அடிப்படையில் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது. கூடுதல் ஆதாரங்கள் தேவைப்படுகிறது என்று சொல்லி மேல்முறையீட்டு அதிகாரியின் தீர்ப்பையே 3.12.2024ல் தீர்ப்பாயமும் உறுதி செய்தது.

ஓரளவு அடிப்படை நிதி நிர்வாகம் தெரிந்தவர்கள் இந்த வழக்கு விவரங்களை பார்த்தாலே, 'சொத்துக்களில் கருப்பு பண முதலீடு' நடைபெற்றுள்ளதை புரிந்துக்கொள்வார்கள். இவ்வளவு ஆதாரங்கள் கிடைத்தும் குற்றத்தை நிரூபிக்க மிகவும் அடிப்படையான விசாரணையை கூட வருமான வரித்துறை நடத்தாமல் 'கோட்டை' விட்டுள்ளது தெளிவாகும். இந்த பிழை தெரியாமல் நடந்தது அல்ல. டெல்லி முதலாளிகளின் கண்ணசைவில் அதன் கூலிப்படையான வருமானத்துறை செய்துள்ள 'சமரசத்தால்' நடிகர் விஜய் தப்பிக்க விடப்பட்டுள்ளார்.
இப்போது புரிகிறதா? பாஜகவால் இயக்கப்படுகிற ஒரு நபர் தான் நடிகர் விஜய் என்பது" இவ்வாறு வன்னியரசு கூறியிருந்தார்.

இந்த பதவினை சுட்டிக்காட்டி பாஜகவினர் வன்னியரசை விமர்சித்து வருகிறார்கள். பாஜக மாநில தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்ட பதிவில் கூறுகையில், 'மக்களை பார்க்காமல் ஓடிப்போன கோழை' என்று கரூர் விவகாரத்தில் த வெ க தலைவர் விஜயை தரக்குறைவாக பேசிய வன்னியரசு, இன்று விஜய் அவர்களின் அமைச்சரவையிலேயே அமைச்சராவது தான் விதியின் விளையாட்டு. காலத்தின் கோலம்." இவ்வாறு கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+