பெரிய கும்பிடு.. குடியரசு தலைவர் தேர்தலில் போட்டி? ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் "பதில்" இது தான்!
புதுச்சேரி: குடியரசுத் தலைவர் தேர்தலில் புதுவை மற்றும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவரே பதில் அளித்துள்ளார்.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றன.
5 மாநில தேர்தல் முடிந்த சில மாதங்களில், தற்போது குடியரசுத் தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்த் பதவிக் காலம் நிறைவடைகிறது.

குடியரசுத் தலைவர் தேர்தல்
நாட்டின் புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்க மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 5 மாநில தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற முடியவில்லை என்றால் மாநிலச் சட்டசபைகளில் உள்ள பாஜகவின் பலம் குறையலாம். இதனால், பாஜகவால் கடந்த முறையைப் போல விரும்பிய வேட்பாளரைத் தனியாக வெற்றி பெற வைக்க முடியாது. இதனால் அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஒரு பொதுவான வேட்பாளரைக் களமிறக்க பாஜக முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழிசை சவுந்தரராஜன்
அதிலும் தற்போது தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநராக உள்ள தமிழிசை சவுந்தரராஜனை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு முன்னிறுத்த பாஜக ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநராகத் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். மேலும், இணக்கமாகச் செயல்படக் கூடியவர் என்பதால் தமிழிசைக்குக் கட்சிகளைத் தாண்டி ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறது பாஜக தலைமை!

புதுச்சேரி கண்காட்சி
கடந்த சில நாட்களாகவே அரசியல் அரங்கில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து தமிழிசையே பதில் அளித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்த 3 பத்திரிகையாளர்கள் குடும்பங்களுக்கு நிதி திரட்டும் வகையில் ஃபோட்டோகிராபர் பட்டாபிராமன் தனது புகைப்படங்களை வைத்து கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த கண்காட்சியைப் பார்வையிட்ட புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை, கண்காட்சியில் இடம் பெற்றிருந்த ஒரு படத்தையும் விலை கொடுத்து வாங்கினார்.

தமிழர்கள் சரித்திரம் படைத்தால்
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் தமிழிசை, "குடியரசு தின விழாவில் இரண்டு மாநிலங்களில் கொடியேற்றியதை வைத்து அரசியல் செய்ய வேண்டியதில்லை. இது 2 மாநில மக்களையும் மதிக்கும் செயல். இரண்டு மாநிலங்களில் கொடியேற்றியது சரித்திரம் என்றால், தமிழர்கள் சரித்திரம் படைப்பதை வரவேற்கலாம் தானே. புதுச்சேரியை பொறுத்தவரை இங்கு ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் இடையே நல்ல இணக்கமான சூழ்நிலை உள்ளது.

தேவையற்ற அரசியல்
கடந்த காலத்தில் இரு தரப்புக்கும் இடையே ஒற்றுமை இல்லாமல் இருந்தது. இதனால் தான் தற்போது எதிர்க்கட்சிகள் தேவையில்லாமல் அரசியல் செய்து வருகின்றனர். எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களை எதிர்மறையாகப் பார்க்கின்றார்கள். ஆனால், ஆளுநர்கள் தங்கள் பணியைத் தான் செய்கிறார்கள். கடந்த காலங்களில் முன்பெல்லாம் ஆளுநர்கள் மாளிகைக்குள் தான் இருப்பார்கள். இப்போது ஆளுநர்கள் மக்கள் பணிகளைச் செய்வதை நாம் வரவேற்க வேண்டும்" என்றார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டி?
அப்போது அடுத்து குடியரசுத் தலைவர் தேர்தலில் நீங்கள் போட்டியிட உள்ளதாகத் தெரிகிறதே என்று செய்தியாளர்கள் சிலர் கேள்வி எழுப்பினர். அந்த கேள்விக்குப் பதில் எதுவும் கூறாமல் துணைநிலை ஆளுநர் தமிழிசை கை கும்பிட்டவாறே அங்கிருந்து புறப்பட்டார். குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்துக் கடந்த சில நாட்களாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications