புதுச்சேரி போறீங்களா .. ஹெல்மெட் போடாம போயிறாதீங்க.. மிரள வைக்கும் போலீஸார்!
புதுச்சேரி: புதுச்சேரியில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் ரூபாய் 1000 அபராதம் விதிக்கப்படும் என்றும் அதுமட்டுமின்றி மூன்று மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் முடக்கப்படும் என்றும், மூன்று மாதங்கள் வாகனங்களை ஓட்ட முடியாது என்றும் புதுச்சேரி அரசு செயலாளர் ஜெய்சங்கர் அண்மையில் அறிவித்தார்.
Recommended Video

இதன்படி கடந்த இரண்டு நாட்களாக ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளிடம் 1000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் ஒன்றரை லட்சம் ரூபாயும், நேற்று 3 லட்சம் ரூபாயும் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இதற்கு திமுக, பாஜக உள்பட பல்வேறு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. புதுச்சேரியில் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு ரூ.1000/- அபராதம் விதிப்பதை கண்டித்து போக்குவரத்து காவல் துறை அலுவலகத்தை புதுச்சேரி திமுகவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கடிதம் அனுப்பி உள்ளோம்
இன்னொரு பக்கம் பாஜக இன்னொரு படிமேலே சென்று, ஹெல்மட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பதை நிறுத்துவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளது. ஹெல்மெட் மற்றும் 144 தடை உத்தரவை ஆளுநர் கிரண்பேடி திரும்ப பெற வேண்டும் என புதுச்சேரி மாநில பாஜக கட்சி தலைவர் சாமிநாதன் வலியுறுத்தி உள்ளார்.

3லட்சம் அபராதம்
ஏன் திடீரென போக்குவரத்து விதிமுறைகள் கடுமையான பின்பற்றப்படுகிறது என்பது குறித்து தெரியாத வாகன ஓட்டிகள் சிக்னல் சிக்னலா பெரியஅளவில் அபராதம் செலுத்தி வருகிறார்கள். நேற்று ஒரே நாளில் 3 லட்சம் ரூபாய் அபராதமாக வாகன ஓட்டிகளிடம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் போடாத குற்றத்திற்காகவே அபராதம் அதிகமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் செய்வது அறியாது தவித்து வருகிறார்கள்.

மத்திய அரசு உத்தரவு
ஏன் இப்படி? வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய போக்குவரத்து துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு புதுச்சேரி மாநிலத்தில் அமல்படுத்தபட்டு தலைகவசம் அணியாதவர்களுக்கு போக்குவரத்து காவல் துறையினர் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து வருகின்றனர்.

பாஜக குற்றச்சாட்டு
இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் புதுச்சேரியில் ஹெல்மட் விவகாரத்தில் புதுச்சேரி போலீசார் கடந்த இரண்டு நாட்களாக வாகன ஓட்டிகளிடம் கடுமையாக நடத்து கொள்கிறார்கள். போலீஸ் துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் நாராயணசாமி மத்திய அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்காக இந்த ஹெல்மட் விவகாரத்தை தற்போது எடுத்துள்ளார். துணைநிலை ஆளுநர் கிரண்பேடி சட்டத்தை மதிக்க சொல்லி இருக்கிறாரே தவிர வாகன ஓட்டிகளிடம் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட சொல்லவில்லை.

ஆளுநருக்கு கோரிக்கை
ஹெல்மட் விவகாரத்தில் துணைநிலை ஆளுநர் மீது வீண் பழியை முதலமைச்சர் நாராயணசாமி சுமத்தி வருகிறார்.புதுச்சேரியில் பல்வேறு சாலைகள் மிகவும் மோசமாக உள்ள நிலையில் தற்போது ஹெல்மெட்டிற்கு அபராதம் விதிப்பது சரியல்ல. ஹெல்மெட் விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை முதல்வர் நாராயணசாமி கூட்ட வேண்டும். ஹெல்மட் விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு புதுச்சேரி பாஜக சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதே போல் ஆளுநர் தனது உத்தரவை மறுபரிசீலனை செய்யவும் பாஜக சார்பில் வலியுறுத்தப்படும். மேலும் புதுச்சேரி நகரப்பகுதியில் தற்போது அமலில் உள்ள 144 தடை உத்தரவை ஆளுநர் உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications