கேட்டில் எகிறி குதித்து உள்ளே போய் அலப்பறை.. முதல்வர் முன்னிலையிலேயே தலைமை செயலரை விளாசிய எம்.எல்.ஏ!
புதுச்சேரி : புதுச்சேரியில் அரசு விழாவின் போது, கேட் ஏறிக் குதித்து உள்ளே சென்று முதலமைச்சர் முன்னிலையில் தலைமை செயலரை திட்டிய எம்.எல்.ஏவால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி உருளையாண்பேட்டை தொகுதியின் சுயேச்சை எம்எல்ஏவாக பதவி வகிப்பவர் நேரு. இவர் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் ஆதரவாளர் ஆவார். இந்நிலையில், புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் மிக தாமதமாக நடைபெறுவதை கண்டித்து நேரு எம்எல்ஏ தலைமையில், தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் அவர்களை அங்கிருந்து கலைந்து போகுமாறு அறிவுறுத்தியும் அவர்கள் கலைந்து போகாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தின் போது தலைமைச் செயலர் கம்பன் கலையரங்கில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட தகவல் அறிந்த நேரு எம்எல்ஏ, தனது ஆதரவாளர்கள் 15 பேருடன் கம்பன் கலையரங்கம் சென்றார்.
எம்.எல்.ஏ நேரு வருவதை அறிந்த ஒதியஞ்சாலை உதவி ஆய்வாளர் ஜாகீர் உசேன் மற்றும் போலீசார் கம்பன் கலையரங்கத்தின் வாசல் கதவை இழுத்து மூடினர். ஆனாலும், நேரு எம்எல்ஏ கேட் மீது ஏறி குதித்து கம்பன் கலையரங்கத்தினுள் சென்று விழா நடைபெற்ற மேடையின் கீழ் நின்று தலைமை செயலரைக் கண்டித்து கோஷமிட்டார்.
கம்பன் கலையரங்கில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் நிகழ்விற்கு முதல்வர் ரங்கசாமி, தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா உள்ளிட்டோர் வருகை தந்திருந்தனர். இந்த விழா அரங்கிற்குள் அத்துமீறி நுழைந்து, முதல்வர் முன்னிலையில் தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் நேரு எம்.எல்.ஏ.
விழா மேடையில் இருந்த புதுச்சேரி அரசின் தலைமை செயலர் ராஜீவ் வர்மாவை பார்த்து புதுச்சேரியில் செயல்படுத்தப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்ன ஆனது? நகர்ப்புறங்கள் குப்பைக்கூளமாக கிடக்கிறது. வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் துர்நாற்றம் வீசுகிறது. இதுவரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் என்ன பணிகள் செய்தீர்கள்? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
மேலும், புதுச்சேரி மக்களின் வரிப்பணத்தில் சம்பளத்தை வாங்கிக் கொண்டு மக்களுக்கு எதிராக செயல்படும் தலைமைச் செயலர் இந்த ஊரில் இருக்கக் கூடாது, உடனடியாக அவர் வெளியேற வேண்டும் அப்படி இல்லை என்றால் அவரை எதிர்த்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றார் எம்.எல்.ஏ நேரு.
பின்னர் முதல்வர் இருக்கிறார் என்ற மரியாதைக்காக இப்போது வெளியே செல்கிறேன், நன்றி வணக்கம் என்று கூறிவிட்டு சென்றார். இச்சம்பவத்தால் விழா மேடையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அரசு விழாவின் போது, முதல்வர் முன்னிலையில் தலைமைச் செயலரை திட்டிய சட்டமன்ற உறுப்பினர் மீது, இரண்டு காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications