சிறுமியை சிதைத்த கொடூரர்களை தூக்குல போடுங்க.. புதுச்சேரி கடலில் இறங்கி பொதுமக்கள் போராட்டம்!
புதுச்சேரி: புதுச்சேரியில் காணாமல் போன சிறுமி, பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் புதுச்சேரி கடற்கரை சாலையில் ஏராளமானோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சிறுமி மாயமான நிலையில் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இதனைத்தொடர்ந்து நேற்று சிறுமியின் உடலை அருகே உள்ள கால்வாயில் சாக்கு மூட்டையில் இருந்து எடுத்தனர். அப்போது, சிறுமி பாலியல் வன்புனர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இது தொடர்பாக 2 பேரை கைது செய்துள்ளனர். 19 வயது இளைஞனும், 60 வயதான ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற 19 வயது இளைஞனும், சிறுமியை தேடுவதாக கடந்த 2 நாட்களாக நாடகமாடியதும் அம்பலமானது.
இந்நிலையில் சிறுமி கொலை விவகாரத்தில், நீதி கேட்டு சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள், பெண்கள் ஆகியோர் ஒன்று திரண்டு புதுச்சேரி கடற்கரை சாலை காந்திசிலை முன்பு கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திடீரென்று பொதுமக்கள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுப்பட்டதால் அந்த பகுதி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், இறந்து போன சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும். சிறுமியை சிதைத்துக் கொன்ற குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும், புதுச்சேரியில் போதைப் பொருளை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்ற போது அவர்களை போலீசாரை தள்ளிவிட்டுவிட்டு கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம், புதுச்சேரியை போராட்டக் களமாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications