காத்திருந்து காத்திருந்து! புதுவையில் தவெகவுடன் இணைந்த கூட்டணி! அப்போ அந்த 2 வேட்பாளர்கள் நிலை?
புதுச்சேரி: புதுவை சட்டசபை தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணியில் "நேயம் மக்கள் கழகம்" இணைந்துள்ளது. இந்த கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த 2 தொகுதிகளுக்கு ஏற்கெனவே தவெக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரி மாநிலத்தில் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும், புதுச்சேரி மாநில வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, "நேயம் மக்கள் கழகம்" நிறுவனத் தலைவர் திரு. G.நேரு (எ) குப்புசாமி MLA அவர்கள், தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளில் "உருளையன்பேட்டை" மற்றும் "தட்டாஞ்சாவடி" ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகள், கூட்டணியில் சேர்ந்துள்ள நேயம் மக்கள் கழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன என்பதை வெற்றித் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
முன்னதாக தவெக தலைவர் விஜய் நேற்று வெளியிட்ட அறிக்கையில் உருளையன்பேட்டை தொகுதியில் மரிய பிரான்சிஸ், தட்டாஞ்சாவடி தொகுதியில் எம்.பன்னீர் செல்வம் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. புதுவையில் ஏப்ரல் 9ஆம் தேதி சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது.
தமிழகத்தில் தவெக கூட்டணியில் இணையுமாறு விஜய் பல்வேறு ஆஃபர்களை கொடுத்திருந்த நிலையில் யாருமே கூட்டணிக்கு வரவில்லை. அவர் என்டிஏ கூட்டணிக்குச் செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதுவும் நடக்கவில்லை.
தவெக தனித்து போட்டியிடுவதாக இஃப்தார் நோன்பில் விஜய் அறிவித்துவிட்டார். மேலும் தமிழகத்தில் ஏற்கெனவே தவெகவுடன் கூட்டணியில் இருந்த ஜனநாயக முஸ்லீம் மக்கள் கட்சி விலகி, திமுக கூட்டணியில் இணைந்துவிட்டது.












Click it and Unblock the Notifications