சமூக இடைவெளியுடன் நூலகம்.. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு.. சபாஷ் புதுவை இளைஞர்கள்
புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா ஊரடங்கு காலத்தில் தனிமனித இடைவெளியுடன் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் அனைவரும் புத்தகம் வாசிக்க 'கற்பி நூலகம்' என்ற திறந்தவெளி நூலகம் தொடங்கி செயல்படுத்தி வருவதோடு, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியர்களை கொண்டு இலவசமாக பாடம் நடத்தி வரும் கிராமப்புற இளைஞர்களின் செயலை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், இந்தியாவிலும் வைரஸ் தொற்றால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா தொற்று பரவலை தடுக்க நாடுமுழுவதும் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், 3 வது முறையாக வரும் 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இங்கு வரும் அனைவருக்கும் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதோடு, தனிமனித இடைவெளியுடன் அமர்ந்து படிக்கும் வகையில் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி வரும் ஜூன் 1 ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில், மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கு ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனி ஆசிரியர்களை ஏற்பாடு செய்து இலவசமாக பாடம் நடத்தி வருகின்றனர்.

இது குறித்து இளைஞர்கள் கூறுகையில், கொரோனா ஊரடங்கு காலத்தில் பல இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் பலரது வயிற்று பசியை போக்கி வருகின்றனர். இச்சூழ்நிலையில் புத்தக வாசிப்பு மூலம் அறிவுப்பசியை பொதுமக்களுக்கு ஊட்ட வேண்டும் என்று நாங்கள் எண்ணினோம். அதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல் 'கற்பி நூலகம்' என்ற திறந்தவெளி நூலகத்தை தொடங்கி செயல்படுத்தி வருகிறோம்.
மேலும் தற்போது 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு எங்கள் ஊர் சமுதாய நலக்கூடத்தில் இலவசமாக சிறப்பு வகுப்புகள் தொடங்கியுள்ளோம்.
இதற்காக தமிழ், கணக்கு, அறிவியல், சமூகவியல் பாடங்களுக்கு தனித்தனியே ஆசிரியர்களை ஏற்பாடு செய்துள்ளோம். காலை 9.30 மணி முதல் 12.30 வரையும், மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரையும் பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. இங்கு தனிமனித இடைவெளி கடைபிடித்து மாணவர்களுக்கு பாடங்கள் சொல்லிக் கொடுக்கிறோம்.

மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் முகக்கவசம் வழங்கியுள்ளோம். இங்கு வருவோருக்கு சானிட்டைசர் கொடுக்கப்படுகிறது. அனைவரும் வாசிப்பு திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும், மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற வேண்டும் என்பதே எங்களுடைய எண்ணம் என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications