எனக்கு பதவி ஒரு பொருட்டே இல்லை... மரியாதை தான் முக்கியம்... புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி
புதுச்சேரி: தமக்கு பதவி முக்கியமல்ல உரிய மரியாதை தான் முக்கியம் எனத் தெரிவித்துள்ளார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி.
மேலும், மாநில மக்களின் உரிமைகளை பாதுகாக்க தாம் போராடி கொண்டிருப்பதாக கூறினார். தியாகிகளை கவுரவிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.
பதவிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் போகலாம் என்றும் அதனை எப்போதுமே ஒரு பொருட்டாக தாம் கருதியதில்லை எனவும் கூறியுள்ளார்.

துணை நிலை ஆளுநர்
புதுச்சேரியை பொருத்தவரை அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமிக்கும் துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம் தான். முதலமைச்சர் ஒரு முடிவெடுத்து அறிவிப்பு வெளியிட்டால் அதற்கு எதிர்க்கட்சிகள் ஆட்சேபனை தெரிவிக்கறதோ இல்லையோ துணை நிலை ஆளுநர் கிரண் பேடி ஆட்சேபனைகள் தெரிவிப்பார். நாராயணசாமியும், கிரண் பேடியும் இப்படி எதிரும் புதிருமாக இருந்து வருவது ஊரறிந்தது.

சுதந்திர தினம்
இந்நிலையில் சுதந்திர தினத்தையொட்டி தியாகிகளை கவுரவிக்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர், புதுச்சேரி இன்னொரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராவதாக தெரிவித்தார். தன்னை பொறுத்தவரை பதவி முக்கியம்மல்ல உரிய மரியாதை தான் முக்கியம் எனக் குறிப்பிட்டார். ஆனால் அதிகாரமே இல்லாத சிலர் மாநில உரிமைகளை தடுத்துவருவதாக சாடினார். கிரண்பேடியை தான் அவர் இவ்வாறு சூசகமாக விமர்சித்துள்ளார்.

போராட்டம்
மேலும், மாநில மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாகவும் அதனை காக்க தாம் போராடி வருவதாகவும் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். எப்படிப்பட்ட சூழலிலும் புதுச்சேரி மக்களின் உரிமைகளை விட்டுக்கொடுக்க மாட்டேன் என்றும் பதவி வரும் போகும் அதைப்பற்றி தாம் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை எனவும் கூறியிருக்கிறார்.

யார் பெரியவர்?
புதுச்சேரியில் முதலமைச்சருக்கு அதிக அதிகாரம் உள்ளதா, துணை துணை ஆளுநருக்கு அதிக அதிகாரம் உள்ளதா என்ற அதிகார யுத்தம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. அரசின் கொள்கை முடிவுகளில் கிரண்பேடி தலையிட்டு முட்டுக்கட்டைகள் போடுகிறார் என்பது புதுச்சேரி காங்கிரஸ் அரசின் குற்றச்சாட்டாக உள்ளது.












Click it and Unblock the Notifications