தொழிலில் நஷ்டம்.. இன்சூரன்ஸ் பணம் பெற ஜெயின் போட்ட பிளான்.. நகை கொள்ளை என நாடகம்!
புதுச்சேரி: புதுச்சேரியில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், இன்சூரன்ஸ் பணம் பெறுவதற்காக நகை அடகு கடை உரிமையாளரே, இரண்டரை கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை போனதாக நாடகமாடியது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
புதுச்சேரி 45 ரோடு பகுதியை சேர்ந்தவர் ராகேஷ்குமார் ஜெயின். இவர் திலாசுப்பேட்டை பகுதியில் நகை அடகு வைக்கும் கடை நடத்தி வருகின்றார். இந்நிலையில் இவர் கடந்த 2 ஆம் தேதி இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் மறு நாள் காலை 3 ஆம் தேதி கடைக்கு வந்து பார்த்தபோது, கடையிலிருந்த லாக்கர்கள் அனைத்தும் திறந்து கிடந்தது.

அதில் இருந்து ரூபாய் இரண்டரை கோடி மதிப்புள்ள 8 கிலோ தங்க நகை மற்றும் ரூபாய் 2 லட்சத்து 80 ஆயிரம் ரொக்க பணத்தை காணவில்லை. அங்கு இருந்த கண்காணிப்பு கேமராவில் உள்ள ஹார்டு டிஸ்க்கும் திருடப்பட்டு இருந்தது. மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர் என்று ராகேஷ்குமார் கோரிமேடு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின் அடிப்படையில் கோரிமேடு போலீசார் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் உள்ள காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். இதில் துப்பு எதுவும் கிடைக்கவில்லை.

கொள்ளை நடந்த கடை உள்ள பகுதி இரவு நேரத்திலும் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் இடமாகும். அந்த கடையில் மொத்தம் 14 பூட்டுகள் போட்டு பூட்டப்பட்டு இருந்தன. அவை அனைத்தும் நவீன பூட்டுகள். எனவே ஒரே நேரத்தில் 14 பூட்டுகளுக்கும் கள்ளச்சாவி தயாரித்து அதனை திறந்து கொள்ளையடிப்பது என்பது இயலாத காரியம் என போலீசார் கருதினர்.
இதனையடுத்து போலீசாரின் பார்வை கடை உரிமையாளர் ராகேஷ்குமார் பக்கம் திரும்பியது. இதனைதொடர்ந்து போலீசார், அந்த அடகு கடை உரிமையாளர் ராகேஷ்குமார் ஜெயின் மற்றும் அவரது மகன் சுரப் ஜெயின் ஆகிய இரண்டு பேரையும் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர்.

போலீசாரின் விசாரணையில், அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். அதனை தொடர்ந்து நகை அடகு வைத்தவர்கள் விவரம் அடங்கிய பட்டியலை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அதில் பலர் நகை அடகு வைத்ததுபோல போலியாக முகவரிகள் இருந்தது தெரிய வந்தது. மேலும் அந்த நகை அடகு கடையின் அருகில் உள்ள கடைகளிலும் விசாரணை நடத்தினர். அப்போது ராகேஷ் குமார் ஜெயினின் கடைக்கு நகைகளை அடகு வைக்க அதிக அளவில் மக்கள் வரமாட்டார்கள் என்பதும் தெரியவந்தது.
மேலும் ராகேஷ் குமார் ஜெயினிடம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது, ராகேஷ்குமார் ஜெயினுக்கு தொழிலில் பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் ரூபாய் 50 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளார். கடனை கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். அவரால் பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.
எனவே நகை கொள்ளை நாடகமாடி அதில் இருந்து வரும் இன்சூரன்ஸ் தொகையை வைத்து பிரச்சினைகளை சமாளித்துவிடலாம் என்று திட்டமிட்டது அம்பலமாகியது. அதற்காக கடந்த 7 மாதங்களாக நகை அடகு வைத்தவர்கள் பட்டியலை அவர் போலியாக தயாரித்து வந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications