ஷாப்பிங் மால்.. சனி, ஞாயிறு மட்டும் ஸ்கெட்ச்.. நூதன பைக் திருடர்கள்.. கொத்தோடு அள்ளிய போலீஸ்
புதுச்சேரி: அண்டை மாநிலமான புதுச்சேரியில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வணிக வளாகத்திற்கு பொழுதுபோக்க வருபவர்களின் இருசக்கர வாகனங்களை குறிவைத்து தூக்கிய, 2 பைக் திருடர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
புதுச்சேரி - கடலூர் சாலையில் உள்ள பிரபல பொழுதுபோக்கு வணிக வளாகம் ஒன்று உள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். பொதுவாகவே வணிக வளாக பார்கிங் கட்டணம் கூடுதலாக தான் இருக்கும். எனவே யாரும் அங்கு தங்களது வாகனங்களை நிறுத்த விரும்ப மாட்டார்கள்.

அருகில் ஏதாவது காலி இடங்களோ அல்லது சாலைகளின் ஓரத்திலோ நிறுத்திவிட்டு, வணிக வளாகத்திற்குள் சென்று வருவார்கள். அதே போல தான் மேற்கண்ட வணிக வளாகத்திற்கு வரும் பலரும், கடலூர் சாலையிலேயே இருபுறமும் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். அப்படி இங்கு நிறுத்தப்படும் பலரது வாகனங்கள் வாரத்தின் இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மட்டும் திருடு போனது.
வணிக வளாகத்திற்கு வருவபவர்களை குறி வைத்து அவர்களின் இரு சக்கர வாகனங்களை, அதுவும் வாரத்தின் கடைசி இரு நாட்களில் ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த பைக் திருட்டு சம்பவங்கள் குறித்து உருளையன்பேட்டை போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருந்தன. இதனையடுத்து போலீசார் அங்கு கண்காணிப்பு கேமராக்களை அமைத்து ரகசியமாக கண்காணித்து வந்தனர். அதில் குறிப்பிட்ட 2 வாலிபர்களின் முகம் அடிக்கடி பதிவாகியிருந்தது. இதனையடுத்து போலீசார்தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த வாலிபர்கள் வணிக வளாகம் பகுதியில் மீண்டும் நடமாடியது குறித்து போலீசாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியபோது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனையடுத்து அவர்களை காவல்நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் விழுப்புரம் விக்ரவாண்டியை சேர்ந்த ராஜ்குமார் (வயது 25) சதிஷ்குமார் (வயது 26) என்பதும், வணிக வளாகம் பகுதியில் திருடிய இருச்ககர வாகனங்களை விழுப்புரத்தில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 9 மோட்டர்சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

இதே போல் பிரபல நிறுவனங்களில் செல்போன்களின் பெயர்களில் போலி செல்போன்கள், சார்ஜர்கள், பேட்டரிகள் விற்பனை செய்த கடைக்காரர் ஒருவர் புதுவையில் கைது செய்யப்பட்டார். சென்னை கொரட்டூரை சேர்ந்தவர் ஆப்பிள் செல்போன் விற்பனையாளரான முருகனுக்கு, புதுச்சேரியில் பல இடங்களில் ஆப்பிள் செல்போன் போலி தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்தது.
இதனையடுத்து புதுவை வந்த முருகன் ரங்கப்பிள்ளை வீதியில் உள்ள செல்போன் கடைக்கு சென்று ஆப்பிள் செல்போனின் உதிரி பாகங்கள் வாங்க வந்திருப்பதாக தெரிவித்தார். அப்போது கடை உரிமையாளரான இமட்டாராம் ஆப்பிள் உதிரிபாகங்களை எடுத்து காண்பித்தார். அதனை முருகன் சோதனை செய்தபோது அவை போலியானவை என தெரியவந்தது.

இதனையடுத்து அதற்கான தொகையை கொடுத்து பில் வாங்கினார். பின்னர் நேராக பெரியக்கடை காவல்நிலையம் வந்து இமட்டாராம் மீது போலி உதிரிபாகங்களை விற்பனை செய்வதாக புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து குறிப்பிட்ட கடைக்கு சென்றனர். அப்போது அந்த செல்போன் கடையில் பல செய்யப்படுவதை கண்டனர். இதனையடுத்து இமட்டாராமை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications