இன்று பழிதீர்க்கும் நத்தம் விஸ்வநாதன்! சசிகலா பற்றி அப்படி ஒரு காட்டமான கமெண்ட்ஸ்- அதிர்ந்த அதிமுக
புதுக்கோட்டை: அதிமுகவில் சசிகலாவை ஒரு போதும் சேர்க்கமாட்டோம்; பாஜக அழைத்தால் அங்கு போய் சசிகலா சேர்ந்து கொள்ளலாம் என முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் காட்டமாக பேசியிருப்பது அக்கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்தில் அதிமுகவில் ஐவரணியின் கைதான் ஓங்கி இருந்தது. அந்த ஐவரணியில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அடுத்ததாக 2-வது இடத்தில் இருந்தவர் மாஜி அமைச்சர் நத்தம் விஸ்வநாதன். அதிமுகவில் கொடி கட்டிப் பறந்தவர். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது முப்பெரும் துறைகள் என வருவாய் கொழித்த துறைகளின் அமைச்சராக வலம் வந்தவர்.

பழிவாங்கப்பட்ட நத்தம் விஸ்வநாதன்
2016- சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னதாகவே நத்தம் விஸ்வநாதனை ஜெயலலிதா- சசிகலா அண்ட்கோ ஒதுக்கி வைத்தது. அத்துடன் நிற்காமல் 2016 சட்டசபை தேர்தலின் போது நத்தம் விஸ்வநாதனை போயஸ் கார்டன் விசாரித்தது. அப்போது தேர்தலில் சீட் வாங்கித் தருவதாக பண மோசடி செய்தது; திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் ஒவ்வொரு முறையும் டம்மி வேட்பாளரை நிறுத்தி திமுகவையே ஜெயிக்க வைப்பது என ஏகப்பட்ட விசாரணைகளுக்குள்ளானார் நத்தம் விஸ்வநாதன். இதன் விளைவாக 2016 தேர்தலில் இப்போதைய அமைச்சர் ஐ.பெரியசாமியை எதிர்த்து ஆத்தூர் தொகுதியில் நத்தம் விஸ்வநாதனையே ஜெயலலிதா நிறுத்தினார். ஜெயலல்தா- சசிகலா அண்ட்கோ எதிர்பார்த்தபடியே நத்தம் விஸ்வநாதன் தோல்வியும் அடைந்தார்.

சசிகலாவால் வீழ்ச்சி
இதனால் நத்தம் விஸ்வநாதனின் அரசியல் எதிர்காலமே ஓரளவு முடிவுக்கும் வந்தது. எந்த திண்டுக்கல் மாவட்டத்தில் கொடிகட்டி கோலோச்சி வலம் வந்தாரோ அதே திண்டுக்கல் மாநகரில் ஒரே ஒரு வாழ்த்து போஸ்டர் ஒட்டுவதற்கு கூட நத்தம் விஸ்வநாதனுக்கு இடம் கிடைக்காமல் போன துயரமும் நடந்தது. பின்னர் ஓபிஎஸ் நடத்திய தர்ம யுத்தத்தில் இணைந்து மீண்டும் தலைகாட்டி இப்போது அதிமுகவில் முன்னணி தலைவர்களில் ஒருவராக மீண்டும் வலம் வந்து கொண்டிருக்கிறார் நத்தம் விஸ்வநாதன். நத்தம் தரப்பைப் பொறுத்தவரையில் தங்களது அரசியல் வீழ்ச்சிக்கு முதல் காரணமாக இருந்தது சசிகலா என்பதில் இன்னமும் வன்மத்துடன் இருக்கிறது. இதனைத்தான் இன்று புதுக்கோட்டை செய்தியாளர்கள் சந்திப்பில் கொட்டித் தீர்த்து ஆசுவாசப்படுத்திக் கொண்டார் நத்த்ம் விஸ்வநாதன்.

சசிகலாவுக்கு நோ
புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த நத்தம் விஸ்வநாதனிடம் சசிகலா குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்கு பதிலளித்த அவர், சசிகலாவை ஒருபோதும் அதிமுகவில் சேர்க்க முடியாது. அதிமுகவில் சசிகலாவை சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை. பாஜக அழைத்தால் சசிகலா அங்கு போய் சேரலாம். அதிமுகவில் அவரை சேர்க்கவே முடியாது என்றார்.

ஒற்றைத் தலைமை இல்லை
மேலும் அதிமுகவில் பொதுச்செயலாளர் என்ற பேச்சுக்கும் இடம் இல்லை; அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்ற பேச்சுக்கும் இடம் இல்லை. அதிமுக பொதுக்குழுதான் அனைத்தையும் முடிவு செய்யும். அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்படும் தீர்மானங்களே இறுதியானது என்றார் நத்தம் விஸ்வநாதன். அன்றைய கோபத்துக்கு இன்று பழிதீர்க்கிறார் நத்தம் விஸ்வநாதன்!












Click it and Unblock the Notifications