தவெக கூட்டத்துக்கு துப்பாக்கியுடன் வந்த நபரை பிடித்த போலீஸ் எஸ்.ஐக்கு துணைநிலை ஆளுநர் விருது!
புதுச்சேரி: தவெக தலைவர் விஜய் புதுச்சேரியில் நடத்திய பொதுக்கூட்டத்துக்கு துப்பாக்கியுடன் வந்த நபரை பிடித்த உதவி ஆய்வாளருக்கு துணைநிலை ஆளுநர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெறும் குடியரசு தின விழாவில், எஸ்.ஐ சுப்பிரமணியனுக்கு பதக்கம் வழங்கப்பட உள்ளது.
குடியரசு தினத்தை முன்னிட்டு காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு சிறப்பு பதக்கங்கள் வழங்கப்படுவது வழக்கம். அந்தவகையில், நாளை குடியரசு தினத்தையொட்டி சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு புதுச்சேரி அரசு, துணைநிலை ஆளுநர் விருதுகளை அறிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி புதுச்சேரி, உப்பளம் துறைமுக வளாகத்தில் தவெக பொதுக்கூட்டம் நடைபெற்றது. 41 பேர் பலியான கரூர் துயர சம்பவத்துக்கு பின்னர் விஜய், பொதுவெளியில் பங்கேற்ற முதல் பொதுக் கூட்டம் இது. இந்தப் பொதுக்கூட்டத்துக்கு அன்று காலை 7.30 மணி முதல் தொண்டர்கள் வர தொடங்கினர். அவர்களை போலீசார் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்து, கியூ ஆர் கோடு பாஸ் பரிசோதனை செய்து அனுமதித்தனர்.
அப்படி கூட்டத்துக்கு வந்திருந்த ஒருவரை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்தபோது, அவரிடம் துப்பாக்கி இருந்தது. அதைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. துப்பாக்கி எடுத்து வந்த நபரிடம் நடத்திய விசாரணையில், அவர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த டேவிட் என்பதும், மத்திய சி.ஆர்.பி.எஃப் படையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர் என்பதும் தெரியவந்தது.
டேவிட் தவெக சிவகங்கை கிழக்கு மாவட்டச் செயலாளர் டாக்டர் பிரபுவின் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலராக பணியில் உள்ளார். டாக்டர் பிரபுவின் பாதுகாப்புக்கு, அரசு அனுமதியுடன் 2 பேர் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர்தான் டேவிட் என்பதும், பிரபு புதுச்சேரி பொதுக்கூட்டத்துக்கு வந்ததால் அவரின் பாதுகாப்புக்காக டேவிட், துப்பாக்கி உடன் வந்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
துப்பாக்கியுடன் வந்த டேவிட் என்பவரை பிடித்தவர் புதுச்சேரி எஸ்.ஐ. சுப்பிரமணியன். விஜய் புதுச்சேரியில் நடத்திய பொதுக்கூட்டத்துக்கு துப்பாக்கியுடன் வந்த நபரை பிடித்த உதவி ஆய்வாளருக்கு துணைநிலை ஆளுநர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெறும் குடியரசு தின விழாவில், எஸ்.ஐ சுப்பிரமணியனுக்கு பதக்கம் வழங்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications