அண்ணன் என்று “ஆப்பு”.. தமிழிசையால் புலம்பும் ரங்கசாமி! 2024 ல் புதுச்சேரி தேர்தல் - நாராயணசாமி பகீர்
புதுச்சேரி: 2024 நாடாளுமன்ற தேர்தலோடு புதுச்சேரியிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்றும், துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் முதலமைச்சர் ரங்கசாமியை அண்ணன் என்று கூறி ஆப்பு வைக்கிறார் எனவும் புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறினார். தமிழ்நாடு ஆளுநர் சூப்பர் முதல்வர் போல் செயல்பட்டு ஸ்டாலின் அரசுக்கு தொல்லை கொடுத்து வருவதாக அவர் கூறியுள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் நடந்து முடிந்த இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் தேர்வு செய்யப்பட்டுள்ள, மாநில தலைவர் ஆனந்தபாபு உள்ளிட்ட அனைத்து மாநில நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் வட்டார நிர்வாகிகளுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் வரவேற்பு ஊர்வலம் அளிக்கப்பட்டது.
புதுச்சேரி கோரிமேடு எல்லையில் இருந்து புறப்பட்ட பேரணியின் போது புதிய நிர்வாகிகள் மேலதாளத்துடன் ஊர்வலமாரக வந்து ராஜீவ் காந்தி மற்றும் பெருந்தலைவர் காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்துவிட்டு காங்கிரஸ் கட்சி அலுவலகம் வந்தனர்.

நாராயணசாமி வரவேற்பு
புதிய இளைஞர் காங்கிரஸ் தலைவர் உள்பட அனைத்து நிர்வாகிகளையும் காங்கிரஸ் கட்சி தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் மற்றும் மூத்த நிர்வாகிகள் வரவேற்று சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உரையாற்றினார்.

பாஜக ஒரு ஆக்டோபஸ்
அதில், "புதுச்சேரியில் நமது 5 ஆண்டு காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சியில் நாம் பட்ட அவதிகளை தற்போது 2 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக ஆட்சியில் ரங்கசாமி என்னைவிட அதிகமான வலி வேதனைகளை அனுபவித்து வருகிறார். பாஜக என்பது ஒரு ஆக்டோபஸ் போன்றது என்றும். தன்னிடம் வருபவர்களை முழுங்கிவிடும். இதுபோல் தற்போது என்.ஆர்.காங்கிரஸை பாஜக விழுங்க ஆரம்பித்திருக்கிறது என்றார்.

புலம்பும் புதுச்சேரி முதலமைச்சர்
தற்போது நிம்மதியாக ஆட்சி செய்யமுடியவில்லை என முதலமைச்சர் புலம்புகிறார். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என வெளிப்படையாகவே புலம்பி வருகிறார். மத்தியில் கூட்டணி ஆட்சி புதுச்சேரியிலும் கூட்டணியில் முதலமைச்சராக ரங்கசாமி உள்ளார். ஆனால் நிதி வழங்குவதில்லை என கூறி வருகிறார். என்னால் இரவில் தூங்க முடியவில்லை, மக்கள் திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை என புலம்ப ஆரம்பித்துவிட்டார்.

அண்ணன் என்று ஆப்பு
பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் பாஜக உங்களை விட்டு வைக்காது. உங்கள் கட்சியை சின்னாபின்னமாக ஆக்கிவிடுவார்கள் என்று கூறினோம். ஆனால் கேட்கவில்லை. இப்போது புலம்பி வருகிறார். புதுச்சேரியில் ஊழல் மலிந்துவிட்டது, ரங்கசாமி ஆட்சியில் ஊழலை தவிர வேறு ஏதும் இல்லை. அனைத்து அமைச்சர் அலுவலகமும் புரோக்கர்கள் அலுவலகமாக மாறிவிட்டது. துணைநிலை ஆளுநர் தமிழிசை முதலமைச்சரை அண்ணன் என்றும் நான் அவருக்கு தங்கை என கூறி வந்து ரங்கசாமிக்கு ஆப்புவைக்கிறார்.

சூப்பர் முதலமைச்சர் ஆர்.என்.ரவி
அமைச்சரவை அனுப்பும் கோப்புகளுக்கு ஒப்புதல் வழங்குவதில்லை. மேலும் ரங்கசாமி அரசு குறைப்பிரசவாக முடிவடையும். நாம் தயாராக இருக்க வேண்டும் 2024 நாடாளுமன்ற தேர்தலோடு புதுச்சேரியிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. முதலமைச்சர் ரங்கசாமியை காலி செய்துவிடுவார்கள். புதுச்சேரியில் தமிழிசையை போல் தமிழ்நாட்டில் ஆளுநர் ரவி சூப்பர் முதலமைச்சராக செயல்படுகிறார். முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிக்கு தொல்லை கொடுத்து வருவதாகவும் காட்டமாக கூறினார்." என்றார்.












Click it and Unblock the Notifications