ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தது ஏன்? தமிழிசை தந்த விளக்கம்..தேர்தலில் போட்டியிட தயார்தான் போலயே!
புதுச்சேரி: லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தெலங்கானா ஆளுநரும், புதுவை துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்திருந்தது பெரும் விவாதங்களை கிளப்பியிருந்தது. இந்நிலையில் நேரடியாக மக்கள் பணியாற்றவே ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார்.
நாடு முழவதும் கடந்த 2019ம் ஆண்டை போலவே, இந்த ஆண்டும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக தமிழ்நாடு புதுச்சேரி என 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர்.

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். இதுவரை சிபிஎம், சிபிஐ, மதிமுக, கொமதேக கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால், அதிமுகவும், பாஜகவும் இன்னும் கூட்டணியையே உறுதி செய்யவில்லை. தமிழக அரசியல் சூழல் இவ்வாறு இருக்கையில், தெலங்கானா ஆளுநரும், புதுவை துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் கொடுத்தார்.
லோக்சபா தேர்தலில் அவர் போட்டியிடுவதற்காகவே ஆளுநர் பதவியை ராஜினாமா செய்திருப்பதாக பேச்சுகள் எழத்தொடங்கியுள்ளன. பிரதமர் மோடி, இவரை தேர்தலில் போட்டியிட கூறியதாகவும், எனவேதான் பதவியை ராஜினாமா செய்திருப்பதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இவருக்கு எந்த தொகுதி ஒதுக்கப்படும் என்பது பெரும் கேள்வியாக எழுந்திருக்கிறது.
பாஜவுக்கு தென் மாநிலங்களில் ஓரளவுக்கு செல்வாக்கு இருக்கிறது. இதனை பயன்படுத்தி ஜெயித்துவிடலாம் என கடந்த முறை தூத்துக்குடியில் கனிமொழியை எதிர்த்து தமிழிசை போட்டியிட்டார். ஆனால், தோல்வியடைந்தார். இந்த முறை இந்த தொகுதி சரத்குமாருக்கு ஒதுக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. கன்னியாகுமரிக்கு பொன்.ராதாரகிருஷ்ணன் துண்டு போட்டு வைத்திருக்கிறார். எனவே, தென் சென்னையில் தமிழிசை போட்டியிடுவார் என்று பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, தன்னுடைய ராஜினாமா குறித்து விளக்கமளித்துள்ளார். அதில், "தீவிரமான மக்கள் பணியை நேரடியாக செய்யவே ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன். ஆளுநராக இருந்தபோது மக்களுக்கான ஆளுநராகவே இருந்திருக்கிறேன். ஆளுநர் பதவி காலத்தில் அரசியல் அனுவபம் அதிகரித்திருக்கிறது. இந்த பதவி என்னுடைய அரசியல் பணியை தடுக்கவில்லை. ராஜினாமா ஏற்றுக்கொண்ட பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி கூறுகிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications