புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பேற்றார் தமிழிசை சவுந்தரராஜன் - தமிழில் உறுதிமொழி ஏற்பு
புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கூடுதலாக பொறுப்பேற்றுள்ளார் தொலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
புதுச்சேரி: தமிழில் உறுதி மொழி ஏற்றுக்கொண்டு புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக கூடுதலாக பொறுப்பேற்றுக்கொண்டார் தமிழிசை சவுந்தரராஜன். அவருக்கு புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடிக்கும், அம் மாநில அரசுக்கும் இடையே கடந்த 4 ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வந்தது. இதனால் அவரை மாற்ற வேண்டும் என்று புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இந்த நிலையில் ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்யவே அங்கு நாராயணசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
நாராயணசாமி முதல்வராக ஒரு நொடி கூட முதல்வராக நீடிக்கத் தகுதியற்றவர் என்றும் எதிர்கட்சியினர் தெரிவித்தனர். பெரும்பான்மையை நிரூபிக்க நாராயணசாமியை உத்தரவிட வேண்டும் என்று எதிர்கட்சியினர் வலியுறுத்தினர்.
அதே நேரத்தில் ராஜினாமா செய்யப்போவதில்லை என்றும் பெரும்பான்மையை நிரூபிப்போம் என்றும் கூறினார் நாராயணசாமி. இந்த சூழ்நிலையில் துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி அந்த பதவியில் இருந்து திடீரென நீக்கப்பட்டார். தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. இதற்கான உத்தரவை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்தார்.
இதனையடுத்து நேற்று மாலை விமானம் மூலம் புதுச்சேரிக்கு வந்தார் தமிழிசை சவுந்தரராஜன். இன்று காலை 9 மணியளவில் புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
பெண்ணின் குற்றச்சாட்டை... பாராட்டாக மாற்றி மொழிபெயர்த்த நாராயணசாமி... வைரலாகும் வீடியோ
தமிழில் உறுதிமொழி எடுத்துக்கொண்டு பதவியேற்றுக்கொண்டார் தமிழிசை சவுந்தராஜன். புதுச்சேரி வரலாற்றில் தமிழில் உறுதிமொழி வாசிப்பது இதுவே முதன் முறையாகும். தமிழ் என் பெயரில் இருப்பது போல உயிரிலும் கலந்திருக்கிறது என்று சொல்லியிருக்கிறார் தமிழிசை சவுந்தரராஜன். அதன்படி டாக்டர் தமிழிசை சவுந்தராஜன் என்னும் நான்... என்ற குரல் புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் ஒலித்தது.
பதவியேற்பு நிகழ்ச்சியில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மாளிகையில் இன்று முதல் புதுச்சேரியில் தமிழிசை சவுந்தரராஜன் தனது பணியை தொடங்க உள்ளார். புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ள இந்த பதவிப் பிரமாணம் நிகழ்ச்சிக்காக பாஜகவினர் ஏராளமானோர் வருகை தந்துள்ளனர்.