என்ன கொடுமை சரவணன் சார்.. வண்டி விலையே ரூ. 2000 தான்.. 10,000 பைன் போட்ட போலீஸ்!
புதுச்சேரி: புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தின் விலையை விட போக்குவரத்து போலீசார் அதிகம் அபராத தொகை விதித்ததால், இருசக்கர வாகனத்தை சாலையிலேயே விட்டுவிட்டு வாலிபர்கள் எஸ்கேப்பான நூதன சம்பவம் நடைபெற்றுள்ளது.
இப்போதெல்லாம் ஓவர் ஸ்பீட், ஹெல்மெட் போடாமல் போவது என எந்தத் தப்பு செய்தாலும் உடனே பாய்கிறது நடவடிக்கை. அதிரடி அபராத விதிப்பால் தப்பு செய்பவர்களின் எண்ணிக்கை நன்றாகவே குறைந்து வருகிறது.
இந்த நிலையில் புதுச்சேரியில் ஒரு காமெடிக் காட்சி நடந்தேறியுள்ளது. அதாவது வண்டி விலையை விட அபராதத் தொகை அதிகமாக இருந்ததால் வண்டி ஓனர்கள் கடுப்பாகி வண்டியை விட்டு விட்டு ஓடி விட்டனர்.
சுற்றுலா நகர் புதுச்சேரி
சுற்றுலா நகரமான புதுச்சேரியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துகொண்டே போகிறது. மேலும் போக்குவரத்து விதிமீறல்களால் அதிகப்படியான உயிரிழப்புகளும் நடைபெறுகின்றன. போக்குவரத்து விதிமீறல்களை தடுக்க பல்வேறு நவீன யுக்திகளை புதுச்சேரி போக்குவரத்து போலீசார் கையாண்டு வருகின்றனர்.
அபராதம் விதிப்பு
மேலும் போக்குவரத்து அதிகம் உள்ள இடங்கள், சந்திப்புகளில் போலீசார் அதிரடியாக வாகனசோதனை நடத்தி அபராதம் விதித்து வருகிறார்கள். வாகனங்களின் ஆவணங்கள், இன்சூரன்ஸ், வாகனத்தை ஓட்டுபவர்களிடம் லைசென்ஸ் உள்ளதா? மது அருந்தியுள்ளாரா? என்பது போன்ற சோதனைகள் நடத்தப்பட்டு குறைகள் கண்டுபிடிக்கப்பட்டால் அபராதம் வசூலிக்கப்படுகிறது.
அதிரடி சோதனைகள்
இந்நிலையில் நகரின் மையப்பகுதியான வெங்கடசுப்பா ரெட்டியார் சந்திப்பு அருகே போக்குவரத்து போலீசார் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு வாலிபர்களை மடக்கிய போலீசார், அவர்களிடம் ஆவணங்களை காட்டுமாறு கேட்டுள்ளனர். ஆனால் அந்த வாலிபர்களிடம் இன்சூரன்ஸ், வாகன உரிமம், ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட எந்தவொரு ஆவணங்களும் இல்லை.
கட்டு அபராதம்
உடனே ஓட்டுநர் உரிமம் இல்லாததற்கு 5 ஆயிரம் , வாகன உரிமம் இல்லாததற்கு 3 ஆயிரம் மற்றும் இன்சூரஸிக்கு 2 ஆயிரம் என மொத்தம் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் காட்டுமாறு அந்த வாலிபர்களிடம் போலீசார் கூறியுள்ளனர். இதனிடையே தாங்கள் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தின் மதிப்பே 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரைதான் இருக்கும். ஆனால் போலீசார் 10 ஆயிரம் அபராதம் கட்ட சொல்கிறார்கள் என எண்ணிய வாலிபர்கள் இருசக்கர வாகனத்தை சாலையிலேயே விட்டுவிட்டனர்.
ஆளை காணலியே!
வீட்டிற்கு சென்று பணத்தை எடுத்து வருவதாக போலீசாரிடம் கூறிவிட்டு சென்றுள்ளனர். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அந்த வாலிபர்கள் வாகனத்தை எடுத்துச் செல்ல வரவில்லை. இதனால் வேறுவழியின்றி அந்த இருசக்கர வாகனத்தை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர் போலீசார். மேலும் அந்த வாலிபர்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடிவேலு படம் ஞாபகத்துக்கு வருதா உங்களுக்கு.. எனக்கு வரலைப்பா!