லோக் சபா தேர்தல்.. கூடவே தட்டாஞ்சாவடி சட்டசபைத் தொகுதிக்கும் இடைத் தேர்தல் .. புதுவையில் விறுவிறு
புதுச்சேரி: லோக்சபா தேர்தலுக்காக புதுச்சேரியில் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு தெரிவித்துள்ளார்.
17 வது மக்களவை தேர்தலுக்கான தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்த பிறகு, புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியில் உள்ள மாநில தலைமை தேர்தல் துறை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு, ஏப்ரல் 18 ஆம் தேதி புதுச்சேரி மாநிலத்தில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதாகவும், அத்துடன் காலியாக உள்ள தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது என்றார்.
மேலும் பேசிய அவர், புதுச்சேரியில் 2019 ஜனவரி மாதம் 31 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்களர் பட்டியலின்படி 9 லட்சத்து 53 ஆயிரத்து 362 வாக்காளர்கள் உள்ளதாகவும், புதுச்சேரியில் தேர்தல் பணிகளில் 5 ஆயிரம் அரசு ஊழியர்களும், 3 ஆயிரம் காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.
அவர், புதுச்சேரியில் தேர்தல் விதி மீறல்களை கண்கானிக்க 41 பறக்கும் படைகளும், 33 நிலையான குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன என்றார். தொடர்ந்து பேசிய அவர், வேட்பாளர்கள் அதிகம் செலவு செய்யும் மாநிலத்தில் புதுச்சேரி மாநிலமும் ஒன்று என்றும், புதுச்சேரியில் வாக்காளர்கள் வாக்களிக்க 970 வாக்குச்சாவடி மையங்களும், 5 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக கந்தவேலு தெரிவித்தார்.
தட்டாஞ்சாவடி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த என்.ஆர்.காங் கட்சியை சேர்ந்த அசோக் ஆனந்த் சொத்து குவிப்பு வழக்கில் பதவியை இழந்தார். அதனால் அங்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.