நடப்பதை பார்த்தால்.. புதுச்சேரியில் என்ஆர் காங்கிரசுடன் இணைந்து திமுக ஆட்சியமைக்குமோ? பரபரப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் என்ஆர் காங்கிரசிடம் இருந்து பாஜக ஆட்சியை கைப்பற்றும் வாய்ப்பு அதிமாகி உள்ளதை கண்டு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. பாஜக கேட்கும் துணை முதல்வர் மற்றும் இரண்டு அமைச்சர் பதவிகளை தருவதாக ரங்கசாமி இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை.. இதனால் அவரிடம் இருந்து பாஜக ஆட்சியை கைப்பற்றக்கூடும் என்ற கருத்து எழுந்துள்ளது.
ஆனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வரும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இதுவரை எந்த பதிலும் சொல்லவில்லை. அமைதிகாத்து வருகிறார்.
உள்நாக்கில் ஆபரேஷன்.. திடீரென மாறிய உச்சரிப்பு..விநோத நோயால் பாதிக்கப்பட்ட ஆஸி. பெண்!
இப்போதைய நிலையில் புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் 10 இடங்களில் வென்றுள்ளது. அதன் கூட்டணி கட்சியாக பாஜக ஆறு இடங்களில் வென்றுள்ளது. இதை வைத்து ஆட்சியும் அமைத்துவிட்டார் ரங்கசாமி. ஆனால் அமைச்சர்கள் யாரும் பதவி ஏற்கவில்லை. துணை முதல்வர் பதவி மற்றும் இரண்டு அமைச்சர்கள் பதவி வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது.
கொண்டுவருகிறோம்
ஆனால் ரங்கசாமியோ, புதுச்சேரிக்கு துணை முதல்வர் என்ற ஒன்று இல்லவே இல்லையே என்றார். ஆனால் பாஜகவோ, உள்துறை அமைச்சகம் மூலம் திருத்தம் செய்து துணை முதல்வர் பதவியை கொண்டு வருகிறோம் என்கிறது. அத்துடன் கட்டாயம் அமைச்சர் பதவியும் வேண்டுகிறது. இதற்கு ரங்கசாமி எந்த பதிலும் சொல்லவில்லை.
பாஜக பலம் 9ஆக உயர்வு
இந்த சூழலில் திடீரென பாஜகவின்ர் 3 பேர் நியமன எம்எல்ஏக்களாக மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களை போல் வாக்களிக்கும் உரிமை உண்டு என்று மத்திய அரசு ஏற்கனவே கூறி உள்ளது. இதன் மூலம் பாஜகவின் பலம் 9 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சுயேட்சை எம்எல்ஏ ஒருவரும் பாஜகவிற்கு ஆதரவு அளித்துள்ளார். இதன் மூலம் என்ஆர் காங்கிரசுக்கு நிகரான பலம் பாஜகவிற்கு கிடைத்துள்ளது. இதன் மூலம் துணை முதல்வர் பதவியை அளிக்குமாறு ரங்கசாமியை பணிய வைக்க பாஜக முயற்சிப்பதாக கூறப்பட்டது.
ஆட்சியை பறிக்க முயற்சி
ஆனால் திமுக மற்றும் அதன் கூட்டணிகள், என்ஆர் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ஆட்சியை பறிக்க பாஜக முயற்சிப்பதாக குற்றம்சாட்டி உள்ளன. எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி திரிபுரா, கோவா, மத்திய பிரதேசம், கர்நாடகா பாணியில் பாஜக ஆட்சியை செய்ய வாய்ப்பிருப்பதாக அபாய குரல் எழுப்பி உள்ளனர்,
திருமாவளவனும் கண்டனம்
இந்நிலையில் பாஜக 3 நியமன எம்எல்ஏக்களை நியமித்து கொண்டதற்கு திமுகவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். எம்.எல்.ஏ.க்களின் பலத்தை வைத்துச் சீர்குலைத்து - கொல்லைப்புற வழியாக ஆட்சியைக் கைப்பற்ற பா.ஜ.க. செய்யும் முயற்சியே அது என்ற சந்தேகம் புதுச்சேரி மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார். விசிக தலைவர் திருமாவளவனும் இதே போன்ற கருத்தை தெரிவித்துள்ளார்.
மாறுமா அரசியல் களம்
திமுக, ரங்கசாமிக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பதை பார்க்கும் போது, அரசியல் நிலவரம் மாறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. என்ஆர் காங்கிரஸ்க்கு 10எம்எல்ஏக்கள் உள்ளனர். திமுகவிற்கு 6 பேர் உள்ளனர். இரு கட்சிகளும் சேர்ந்து ஆட்சியமைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. பாஜகவின் நிபந்தனைகளை ஏற்று ஆட்சி அமைப்பாரா அல்லது பாஜகவை கழட்டிவிட்டு விட்டு திமுக உடன் கைபோர்ப்பாரா என்பது விரைவில் தெரிந்துவிடும். இதனிடையே திமுகவின் புதுச்சேரி அரசியல் குறித்த கருத்துக்களால் பாஜக அதிர்ச்சியில் உள்ளது.