செம.. புதுச்சேரி அமைச்சரவையில்..40 ஆண்டுகளுக்கு பிறகு பெண்ணுக்கு இடம்.. அசத்திய முதல்வர் ரங்கசாமி!
புதுச்சேரி: புதுச்சேரி அமைச்சரவையில் 40 ஆண்டுகளுக்கு பிறகு பெண் அமைச்சர் ஒருவர் இடம் பெற்றுள்ளார்.
புதுச்சேரி மாநில சட்டமன்ற தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது.
என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.ஆனால் ஆட்சி அமைத்து 50 நாட்களை கடந்த பின்னரும் அமைச்சரவையை தேர்வு செய்வதில் கடும் குழப்பம் நிலவியது.
50 நாட்கள் இழுபறிக்குப் பின் புதுச்சேரி அமைச்சரவை இன்று பதவியேற்பு... எத்தனை நாள் தாக்கு பிடிக்குமோ?
கடும் இழுபறி
தனக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று பாஜகவை சேர்ந்த ஜான்குமார் போர்க்கொடி தூக்கியதால் அமைச்சரவையை தேர்வு செய்வதில் கடும் இழுபறி நிலவிய நிலையில் ஒரு வழியாக அமைச்சரவை இறுதி செய்யப்பட்டது. என்.ஆர். காங்கிரஸ் சார்பில் முன்னாள் அமைச்சர்களான லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார், காரைக் காலைச் சேர்ந்த சந்திர பிரியங்கா ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.
40 ஆண்டுகளுக்கு பிறகு பெண்
பாஜக சார்பில் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், ஊசுடு தொகுதி எம்எல்ஏ சாய் ஜெ.சரவணக்குமார் ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். புதிய அமைச்சர்களின் பதவியேற்பு விழா இன்று மதியம் நடைபெறுகிறது. இந்த புதிய அமைச்சரவையில் 40 ஆண்டுகளுக்கு பிறகு பெண் அமைச்சர் ஒருவர் இடம் பெற்றுள்ளார்.
சந்திர பிரியங்கா
காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு தொகுதியில் வெற்றி பெற்ற சந்திர பிரியங்கா, புதுவையில் 40 ஆண்டுகளுக்கு பிறகு அமைச்சரவையை அலங்கரிக்க போகும் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார். சந்திர பிரியங்கா, முன்னாள் அமைச்சர் சந்திரகாசுவின் மகளாவார். தொடர்ந்து 2-வது முறையாக நெடுங்காடு தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
முதல்வருக்கு பாராட்டு
கடந்த 1980-ம் ஆண்டு காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியில் ரேணுகா அப்பாத்துரை கல்வி அமைச்சராக இருந்தார். அதன்பின்னர் சந்திர பிரியங்காவுக்கு தான் இந்த பெருமை கிட்டியுள்ளது. சிறப்பு அமைச்சர் பெருமையை பெற்றுள்ள சந்திர பிரியங்காவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 40 ஆண்டுகளுக்கு பிறகு அமைச்சரவையில் பெண்ணுக்கு இடம் கொடுத்த முதல்வர் ரங்கசாமிக்கும் பாராட்டு குவிந்து வருகிறது.