'பரபர' ஆலங்குடி.. அதிமுக தலையெழுத்து.. மாற்றுவார்களா 'லீடிங்' முத்தரையர் சமூகத்தினர்?
புதுக்கோட்டை: ஆலங்குடி தொகுதியில் திமுக, அதிமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பளார்கள் இருவருமே முத்தரையர்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அங்கு பெரும் குழப்பம் நீடித்து வருகிறது.
ஆலங்குடி சட்டமன்ற தொகுதி, கடந்த காலங்களில் ஒரு முக்கியமான தொகுதியாக இருந்து வந்துள்ளது. திமுக, அதிமுக கட்சிகள் இங்கு கணிசமான அளவில் ஜெயித்துள்ளன.
தற்போது அங்கு சிட்டிங் எம்.எல்.ஏ.வாக இருப்பது திமுகவின் மெய்யநாதன். இம்முறை மீண்டும் அங்கு திமுக சார்பில் இவர் தான் களம் காண்கிறார். அதேசமயம், அதிமுக சார்பில் தர்ம.தங்கவேல் என்பவர் நிறுத்தப்பட்டுள்ளார்.
மண்ணைத் தொட்டு வணங்கி
இங்கு எம்.எல்.ஏ. மெய்யநாதனுக்கு ஏற்கனவே தொகுதி மக்கள் மத்தியில் நல்ல பெயர் உள்ளது. ஆலங்குடி தொகுதிக்கு ஓரளவு நன்றாகவே செய்திருக்கிறார் என்று உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். நல்ல வாய்ஸ் உள்ளது. இம்முறை, சீட் அறிவிக்கப்பட்டவுடன், ஆலங்குடி மண்ணைத் தொட்டு வணங்கி, பிரச்சாரத்தைத் தொடங்கிய சம்பவமெல்லாம் அரங்கேறியது.
அசராத தலைமை
அதேசமயம், அதிமுக கேண்டிடேட் தர்ம.தங்கவேல் நிறுத்தப்பட்டிருப்பது உள்ளூர் ரத்தத்தின் ரத்தங்களை கொதிப்படையச் செய்தது. அதிமுக வேட்பாளரை மாற்ற வேண்டும் என்று போராட்டங்களும் நடத்தினர். ஆனால், அதிமுக தலைமை அவர் தான் வேட்பாளர் என்பதில் மிக உறுதியாக உள்ளது. அதற்கு முக்கிய காரணம் அமைச்சர் விஜயபாஸ்கர்.
ஒரே சமூகம்
அமைச்சர் விஜயபாஸ்கர் பரிந்துரையின் பேரில் தான் இவருக்கு சீட் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, அவர் 'கோர் அதிமுக' ஆதரவாளர் கிடையாது. எனினும், மெய்யநாதன் vs தர்ம தங்கவேல் என்ற களம் அங்கு உறுதியாகிவிட்டது. ஆனால், இப்போது சிக்கல் என்னவெனில், இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதே. ஆம்! இருவரும் முத்தரையர்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
வெற்றி யாருக்கு?
ஆலங்குடி தொகுதியைப் பொறுத்தவரை, அங்கு பெரும்பான்மையாக வசிப்பவர்கள் முத்தரையர்கள் தான். அதற்கு அடுத்தபடியாக முக்குலத்தோர் உள்ளனர். பட்டியல் இனத்தவரும் கணிசமாக உள்ளனர். ஆலங்குடி தொகுதியை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற டார்கெட்டோடு, முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்த தர்ம தங்கவேலை அமைச்சர் விஜயபாஸ்கர் நிறுத்தியுள்ளார். இதன் மூலம், உள்ளூர் மக்கள் செல்வாக்கு கொண்ட மெய்யநாதனின் ஜாதி வாக்குகளை நிச்சயம் பிரிக்க முடியும் என்று நம்புகிறாராம். இதனால், அங்கு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.