வேங்கைவயல் விவகாரம்: சிபிசிஐடி விசாரணை சரியான பாதையில் செல்கிறது.. நீதியரசர் சத்யநாராயணன் பேட்டி!
புதுக்கோட்டை: வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக விசாரித்து வரும் ஒரு நபர் ஆணையத்தின் தலைவர் நீதியரசர் சத்யநாராயணன் மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். சிபிசிஐடி விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டுள்ளதாகவும் சத்யநாராயணன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை அருகே வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி போலீசார் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு பால்பாண்டி தலைமையில் வேங்கைவயல் விவகாரம் தொடர்பான விசாரணை நடைபெறுகிறது.

உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வகையில், அறிவியல் ரீதியாக தடயங்கள் சேகரிப்போடு, அதற்கான ஆதாரங்களையும் திரட்டி வருகின்றனர். இதற்கிடையே வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த சென்னை ஐகோர்ட்டால் ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது.
குடிநீர் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் தொடர்பாக வேங்கைவயல் கிராமத்திற்கு கடந்த மே மாதம் ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணன் நேரில் சென்று விசாரணை நடத்தினார். புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் வேங்கைவயல் சென்று நீதிபதி சத்யநாராயணன் விசாரணை நடத்தினார்.
இந்நிலையில், வேங்கைவயல் விவகாரத்தில் 2வது முறையாக இன்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும், சிபிசிஐடி மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார் நீதியரசர் சத்யநாராயணன்.
அதைத்தொடர்ந்து பேசிய நீதியரசர் சத்யநாராயணன், "வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக இப்போதைக்கு சிபிஐ விசாரணை தேவையில்லை. இந்த விவகாரத்தில் சிபிசிஐடியின் விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications