''ஸ்டாலின் பயப்படுவதற்கு காரணம் உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட் தான்''.. சவால் விடும் சி.விஜயபாஸ்கர்!
புதுக்கோட்டை: அதிமுக மாநாடு மிகப் பெரிய வெற்றிபெறும் என உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்டை பார்த்த முதலமைச்சர் ஸ்டாலின் பயந்துவிட்டதாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மேலும், நீட் தேர்வு தொடர்பாக அமைச்சர் மா.சுப்ரமணியனோடு நேருக்கு நேர் விவாதிக்க தாம் தயாராக இருப்பதாக சவால் விடுத்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார்.

ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் அல்ல 24 மணி நேரமும் நீட் பற்றி தாம் விவாதிக்க தயார் என்றும் நீட் என்ற விதை யாருடைய ஆட்சிக்காலத்தில் விதைக்கப்பட்டது என்பதை பற்றியெல்லாம் பேசலாம் என அமைச்சர் மா.சுப்ரமணியனுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அதிமுக நடத்தும் மாநாட்டை இருட்டடிப்பு செய்ய வேண்டும் என்பதற்காக தான் ஆகஸ்ட் 20ஆம் தேதி பயத்தில் திமுக உண்ணாவிரத போராட்டம் நடத்துவதாக விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்தில் நீட்டை ஒழித்துவிடுவோம் என்று சொன்னது யார் என்றும் ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் தான் அப்படி கூறி வாக்குகள் பெற்றார்கள் எனவும் கூறினார்.

நீட் தேர்வு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடக்கூடாது என சாடிய விஜயபாஸ்கர், எல்லா நிகழ்வையும் தாண்டி அதிமுக மாநாடு வெற்றிபெறுவது உறுதி எனக் கூறியுள்ளார். இதனிடையே கொடுத்த வாக்குறுதி என்னவானது என மக்கள் திமுக அரசை பார்த்து கேட்கத் தொடங்கிவிட்டதாக சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மேலும், அதிமுக ஆட்சிக்காலத்தில் 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதையும் சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிசாமியின் புகழ் புராணம் பாடினார் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.












Click it and Unblock the Notifications