கடும் எதிர்ப்பு.. கறுப்புக்கொடியோடு குவிந்த தொண்டர்கள்.. அதிர்ந்த சித்தன்னவாசல்.. ஆளுநர் பயணம் ரத்து
புதுக்கோட்டை: ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று சித்தன்னவாசல் வர இருந்த நிலையில் அவருக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட இருந்தன. இந்நிலையில் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்.என். ரவி தமிழ்நாட்டின் ஆளுநராக பொறுப்பேற்றதிலிருந்து, மாநில அரசுக்கும் அவருக்கும் இடையேயான உறவு அவ்வளவு சிறப்பாக இல்லை. மாநில அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை நிலுவையில் வைப்பது தொடங்கி, திருவள்ளுவர், கார்ல் மார்க்ஸ் வரை சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிப்பது என ஆளுநரின் போக்கு கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டது.

இதற்கெல்லாம் உச்சமாக, சுதந்திர போராட்டத்தில் காந்தியின் பங்கு ஒன்னுமே இல்லை என்றும், தேச தந்தை நேதாஜிதான் எனவும் அவர் பேசியிருந்தது அனைத்து தரப்பினரையும் கொந்தளிக்க வைத்தது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், விசிக என திமுக கூட்டணி கட்சிகள் அனைத்தும் ஆளுநருக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. அதேபோல ஆளுநர் சார்பில் வழங்கப்பட்ட தேநீர் விருந்தையும் கூட்டணி கட்சிகள் புறக்கணித்தன.
இந்நிலையில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பங்கேற்றிருந்தார். ஆனால், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் இதில் பங்கேற்கவில்லை. அமைச்சர் நிகழ்ச்சிக்கு வருவதாக அழைப்பிதழில் அச்சிடப்பட்டிருந்த நிலையில், கடைசி வரை அவர் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. ஏற்கெனவே மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அப்போதைய உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி பங்கேற்காமல் புறக்கணித்திருந்தார். இதே பாணியில் ராஜகண்ணப்பனும் நிகழ்வை புறக்கணித்துள்ளார்.
இந்நிலையில், இன்று ஆளுநர் சித்தன்னவாசல் ஓவியங்களை பார்வையிட இருந்தார். ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காலை முதல் ஆளுநர் வரும் வழியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சியின் கருப்புக்கொடி மற்றும் பலூனை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கந்தர்வக்கோட்டை சிபிஎம் எம்எல்ஏ சின்னதுரையும் பங்கேற்றிருந்தார்.
போராட்டம் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், ஆளுநர் சித்தன்னவாசல் பயணத்தை ரத்து செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேரமின்மையால் இந்த பயணம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் அறிவித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications