பணம் பதுக்கல்? அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் வீட்டில் அங்குலம் அங்குலமாக அதிகாரிகள் சோதனை
புதுக்கோட்டை: தமிழக அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் சோத்துப்பாளை முருகேசன் வீட்டில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து இந்த சோதனை நடத்தப்பட்டது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தின் இறுதி நாள் இன்று. கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி பல கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த நிலையில் இன்று புதுக்கோட்டை எழில் நகரில் உள்ள ஒப்பந்ததாரர் சோத்துப்பாளை முருகேசன் வீட்டிலும் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
வீட்டின் ஒவ்வொரு பகுதியையும் அங்குலம் அங்குலமாக அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஏற்கனவே மணப்பாறை எம்.எல்.ஏ. சந்திரசேகரின் ஓட்டுநர் வைக்கோல் போரில் ரூ1 கோடி பதுக்கி வைத்திருந்தது பிடிபட்டது.
இதனால் சோத்துப்பாளை முருகேசன் வீட்டை சுற்றிய பகுதிகளிலும் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என தீவிரமாக அதிகாரிகள் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications