ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை முடக்க... மத்திய அரசுக்கு சீமான் வக்காலத்து -மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
புதுக்கோட்டை: 100 நாள் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தால் விவசாயப் பணிகள் பாதிக்கப்படுவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறிய கருத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை முடக்க நினைக்கும் மத்திய அரசுக்கு வக்காலத்து வாங்குவது போல் சீமானின் கருத்து உள்ளதாக மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இவர் இதனைக் கூறினார்.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மத்திய அரசு கடன் தள்ளுபடி செய்யும் போது அதை கண்டுகொள்ளாத சீமான், கிராமப்புற ஏழை எளிய மக்களின் வாழ்வாதார திட்டமாக விளங்கும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை குறை கூற என்னக் காரணம் என அவர் வினவியுள்ளார். ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மூலம் நாடு முழுமதும் 14 கோடி பேர் பயன்பெற்று வருவதாக புள்ளிவிவரத்தையும் அடுக்கினார் கே. பாலகிருஷ்ணன்.
மேலும், கடந்த காலங்களில் கமல்ஹாசன் பேசியதை போல் இப்போது சீமான் பேசியிருப்பதாகவும், இதனிடையே 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை நகர்ப்புறங்களிலும் செயல்படுத்த தமிழக அரசு நிதி ஒதுக்கியிருப்பது வரவேற்க வேண்டிய ஒன்று எனவும் கூறினார்.
இதனிடையே கூட்டணியை பொறுத்தவரை மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தலை போல் உள்ளாட்சித் தேர்தலில் எதிர்பார்க்க முடியாது என்றும் இருப்பினும் திமுக கூட்டணி ஓரளவு கட்டுப்பாடுடன் இயங்குவதாகவும் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
மேலும், குடிமைப்பணி தேர்வில் தமிழகத்தில் இருந்து குறைந்த எண்ணிக்கையிலேயே தேர்வாகி இருப்பதால், இனி வரும் காலத்தில் இந்த எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் அரசு பயிற்சி மையங்களை அதிகரிக்க முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எதிர்வரும் 2024 -ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரளும் என்ற நம்பிக்கை உள்ளதாக கூறிய அவர் அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களில் ஆன்லைன் பதிவு முறை தேவையற்றது என தமிழக அரசுக்கு யோசனையும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications