இபிஎஸ்-ஐ நம்பி கூட்டணிக்கு வர யாரும் ரெடியா இல்லை.. எடப்பாடிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ரகுபதி
புதுக்கோட்டை: எடப்பாடி பழனிசாமியை நம்பி யாரும் கூட்டணி அமைக்க தயாராக இல்லை என்றும், திமுக கூட்டணியில் உரசல் உள்ளதாக எடப்பாடி பழனிசாமி பேசுவது பகல் கனவு என்றும் சட்டத் துறை அமைச்சர் ரகுபதி பேசியுள்ளார்.
தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இன்று 304 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெறுகிறது. அறநிலையத்துறை சார்பில் மணப்பெண்ணுக்கு 4 கிராம் எடையுள்ள தங்கத்தாலி, தம்பதிகளுக்கு கட்டில், மெத்தை, பீரோ உள்பட ரூ.60,000 மதிப்பில் சீர்வரிசைகள் வழங்கப்பட்டுள்ளன.

சென்னை திருவான்மியூரில் 31 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்து, புதுமணத் தம்பதிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
இதேபோல, புதுக்கோட்டை, திருவப்பூர் முத்து மாரியம்மன் கோயிலில் நான்கு இணையர்களுக்கும், கொன்னியூர் முத்து மாரியம்மன் கோயிலில் 3 இணையர்களுக்கும் என 7 இணைகளுக்கு தமிழக அரசின் இந்து அறநிலையத் துறை சார்பில் அவர்களுக்கு பரிசுப் பொருட்களோடு கூடிய திருமண நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற சட்டத் துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழக மக்களின் கோரிக்கையாக உள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு தற்போது எந்தவொரு வேலையும் இல்லாததால் பகல் கனவு காண ஆரம்பித்துவிட்டார்.
திமுக கூட்டணியை எடப்பாடி பழனிசாமி உடைக்கவும் முடியாது, கொளுத்தவும் முடியாது, எரிக்கவும் முடியாது, நொறுக்கவும் முடியாது, நசுக்கவும் முடியாது. இதெல்லாம் அவர் சார்ந்த கட்சிக்கு ஏற்படுமே தவிர முக ஸ்டாலின் தலைமையிலான கூட்டணிக்கு எந்தவொரு சிறிய பாதிப்பும் ஏற்படாது.
தமிழ்த்தாய் வாழ்த்து என்பது தமிழகத்தில் இருக்கக்கூடிய அத்தனை மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு எல்லோராலும் பாடப்பட்டு வருகிறது. ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்து குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் புதிய சர்ச்சை ஒன்றைக் கிளப்பியுள்ளார். தமிழ்நாடு, திராவிடம் என்ற இரண்டையும் தமிழ்நாட்டில் இருந்து பிரிக்க முடியாத சொற்கள்.
தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய எந்தக் கட்சியாக இருந்தாலும், திமுக, அதிமுக, தேமுதிக, மதிமுக என அனைத்துக் கட்சிகளுமே திராவிடம் சார்ந்த கட்சிகள்தான். திராவிடம் சாராத எந்தக் கட்சியும் இங்கில்லை. கட்சியை ஆரம்பித்துள்ளவர்கள் அனைவருமே திராவிடத்தோடு இணைந்துதான் கட்சியை ஆரம்பித்துள்ளனர். திராவிடம் என்பது தமிழ் மண்ணில் ஊறிப்போன சொல்.
திராவிடர் கழகம், திராவிடர் முன்னேற்றக் கழகம் திராவிடத்தை முன்னெடுத்துச் செல்லும். எந்தவொரு இயக்கத்தையும் திமுக அழிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு இயக்கத்தின் தலைமை பலவீனமாகிவிட்டால் அந்த இயக்கம் தானாகவே அழிந்துவிடும். இன்று அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் தலைமை மிகவும் பலவீனமாகிவிட்டது. அதனால் தான் அக்கட்சியினர் புலம்பி வருகின்றனர்.
அதிமுகவோடு கூட்டணி சேர யாருமே தயாராக இல்லை. நம்பிக்கைக்குரிய கூட்டணியாக அதிமுக இல்லை. எடப்பாடி பழனிசாமியும் அனைத்து வலைகளையும் வீசிப் பார்க்கிறார். ஆனால் அவர்களுடன் கூட்டணி சேர யாரும் விரும்பவில்லை. திரும்பி கூட பார்க்கவில்லை. திருமாவளவனை முதலமைச்சராக்குவேன் என்று சீமான் கூறிய கருத்து குறித்த கேள்விக்கு, சீமான் கற்பனைகளில் எதை வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டு போகலாம்.
நம்முடைய திருமாவளவனைப் பொறுத்தவரைக்கும் திமுக கூட்டணியில் உறுதியோடு இருக்கிறார். முக ஸ்டாலினின் தலைமையில் அரசு அமைவதிலும் அவர் உறுதியாக இருக்கிறார்.












Click it and Unblock the Notifications