சிபாரிசு கேட்டு வர வேண்டாம்.. வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய அமைச்சர் ரகுபதி.. அதிருப்தியில் திமுகவினர்..!
புதுக்கோட்டை: நீதிமன்ற பணிகளுக்காக சிபாரிசு கேட்டு தன்னை யாரும் சந்திக்க வேண்டாம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தனது வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய விவகாரம் திமுகவினரை அதிருப்திகொள்ளச் செய்துள்ளது.
நீதிமன்ற அலுவலக உதவியாளர், தோட்டக்காரர், துப்புரவு பணியாளர், உள்ளிட்ட பணியிடங்களுக்கு பரிந்துரை கோரி அமைச்சர் ரகுபதி இல்லத்திற்கு கட்சியினர் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
குறிப்பாக சென்னையை காட்டிலும் புதுக்கோட்டையில் உள்ள அவரது இல்லத்தில் ரகுபதியை சந்திப்பதற்காக சனி மற்றும் ஞயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அலைமோதுகிறது.

காலி பணியிடம்
நீதிமன்ற பணியிட விவகாரத்தில் அமைச்சர் தலையிட முடியாது என அவரது உதவியாளர்கள் எடுத்துக் கூறினாலும் கட்சியினர் அதை கேட்டதாக தெரியவில்லை. அப்புச்சியை (ரகுபதியை இப்படி அழைக்கும் கட்சியினர் ஏராளம்) பார்த்துவிட்டுத் தான் செல்வோம் என்றும் பிடிவாதம் பிடிக்கின்றனர். இதனால் அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக காலையில் வீட்டிலிருந்து புறப்படுவதற்குள் அமைச்சர் ரகுபதிக்கு போதும் போதும் என்றாகிவிடுகிறது.

அதிரடி நோட்டீஸ்
கட்சியினரிடம் கடுகடுப்பு காட்டினால் அது வேறுமாதிரி ஆகிவிடும் என்பதால் அமைச்சர் தரப்பும் சிபாரிசு கடிதம் கோரி வருபவர்களிடம் பொறுமைகாட்டி வந்தது. இதனிடையே நாளுக்கு நாள் நீதிமன்ற காலி பணியிடங்களுக்கு பரிந்துரை கடிதம் தருமாறு ரகுபதி இல்லத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியதால், அதிரடி நோட்டீஸ் ஒன்றை வீட்டு வாசலில் ஒட்டி கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளனர் அமைச்சர் ரகுபதியின் அலுவலக ஊழியர்கள்.

வர வேண்டாம்
நீதிமன்ற பணியிடங்கள் முறைப்படி நிரப்பப்படுவதால் இது தொடர்பான கோரிக்கைகளுடன் அமைச்சரை யாரும் அணுக வேண்டாம் என அந்த நோட்டீஸில் தெரிவித்துள்ளனர். நீதிபதிகளை உள்ளடக்கிய தேர்வுக் குழுவினரே நீதிமன்ற பணியாளர்களை தேர்வு செய்வதாகவும் அதில் தெரிவித்துள்ளனர். முழுக்க முழுக்க நீதிமன்றம் தொடர்புடைய விவகாரம் என்பதால் அதில் தலையிட்டு சர்ச்சையில் சிக்கிக் கொள்ள விரும்பாத அமைச்சர் ரகுபதி, அதற்கேற்றவாறு தனது நடவடிக்கைகளை அமைத்துக் கொள்கிறார்.

அதீத நம்பிக்கை
இதனிடையே ரகுபதி அண்ணன் எனக்கு அவ்வளவு பழக்கம், நான் சொன்னால் நிச்சயம் செய்துகொடுப்பார் என்ற அவர் மீதான அதீத நம்பிக்கையில் சந்திக்க செல்பவர்களுக்கு இந்த நோட்டீஸ் கடும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளித்துள்ளது. ஏற்கனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் உள்ளதால் அங்கு உள்ளூர் அரசியல் பனிப்போர் நிலவி வரும் சூழலில் இந்த நோட்டீஸ் விவகாரம் அதை மேலும் அதிகரிக்க வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications