வித்தியாசமாக செய்த விஜயபாஸ்கர்.. வழங்கிய பொங்கல் பரிசு.. ஆச்சர்யத்தில் பொதுமக்கள்!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் 'நம்ம விஜயபாஸ்கர் வீட்டு பொங்கல் சீர்' என்ற பெயரில் பொதுமக்களுக்கு பரிசு பையை வழங்கி ஆச்சர்யப்பட வைத்துள்ளார்.
சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஒவ்வொரு தொகுதி எம்எல்ஏக்களும் தாங்களே அந்த தொகுதியில் மீண்டும் போட்டியிடுவோம் என்ற நம்பிக்கையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை இப்போது தீவிரமாக செய்து வருகிறார்கள்.
எம்எல்ஏக்கள் ஒரு பக்கம் என்றால், அமைச்சர்களோ தங்களின் தொகுதியில் செல்வாக்கை காட்ட தண்ணீர் போல் தாராளமாக செலவு செய்து வருகிறார்கள். அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி எம்எல்ஏ ஆவார். சொந்த ஊரில் உள்ள நேரங்களில் அடிக்கடி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை நடத்தி வருகிறார் விஜயபாஸ்கர்.

அதிமுகவினர் விழா
தேர்தல் நெருங்கிவிட்ட இந்த சூழலில் விராலிமலை தொகுதியில் அதிமுகவினர் நேற்று நடத்திய பல்வேறு நிகழ்ச்சிகளில் பொதுமக்களுக்கு 'நம்ம விஜயபாஸ்கர் வீட்டு பொங்கல் சீர்' என்று அச்சிடப்பட்ட பரிசு பையை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்.

விஜயபாஸ்கர்
இதில் பித்தளை பொங்கல் பானை, கரண்டி, பச்சரிசி, வெள்ளம், பாசிபருப்பு, நெய் மற்றும் பொங்கல் வைக்க தேவையான அனைத்து பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு பொருட்கள் இடம் பெற்று இருந்தன. விராலிமலை தொகுதியில் திடீர் என பொதுமக்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பொங்கல் சீர் தொகுப்பை வழங்கிய நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நலத்திட்ட உதவிகள்
ஏனெனில் அதிமுக எம்எல்ஏக்கள் யாரும் இப்படி ஒரு திட்டத்தை செய்யவில்லை. வழக்கமான பொங்கல் பரிசு துவக்கவிழா, கட்டிடங்கள் திறப்பு விழா, சாலைகள் விரிவாக்க பணிகள், குடிநீர் தொட்டி திறப்பு, நூலகம் திறப்பு மற்றும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி என்று அரசு விழாக்களைத்தான் நடத்தி வருகிறார்கள்.

ஆச்சர்யம்
இதில் இருந்து முற்றிலும் மாறுபட்டு அமைச்சர் விஜயபாஸ்கர் தனது புகைப்படத்துடன் கூடிய 'நம்ம விஜயபாஸ்கர் வீட்டு பொங்கல் சீர்' என்ற பெயரில் பொதுமக்களுக்கு பரிசு பையை வழங்கியது மிகவும் புதுமையாக இருந்தது. அமைச்சர் விஜயபாஸ்கரே பலருக்கும் வழங்கினார். இது எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி ஆளும் கட்சியினரையும் புருவத்தை உயர்த்தி ஆச்சர்யப்பட வைத்து உள்ளது.












Click it and Unblock the Notifications