தாய்மாமனாக மாறிய சிங்கப்பூர் முதலாளி! புதுக்கோட்டை ஆலங்குடியில் ஆறுமுகம் வீட்டில் விசேஷம்! ஆச்சரியம்
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் பிரம்மாண்டமாக நடந்த காது குத்து விழாவின் வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் பகிரப்பட்டு பலராலும் பாராட்டை பெற்று வருகிறது. ஆலங்குடியில் ஆறுமுகம் வீட்டு விசேஷத்தில் என்ன நடந்தது? யாரிந்த சிங்கப்பூர் முதலாளிகள்? இவர்களை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
திருமணம், காதுகுத்து, உள்ளிட்ட ஒவ்வொரு வீட்டு விசேஷங்களும், யாராலுமே வாழ்க்கையிலும் மறக்க முடியாத நிகழ்வாகும்.. அதனால்தான், ஏழ்மையில் உள்ளவர்களும் கடன்வாங்கியாவது இந்த சுப காரியத்தை செய்துவிடுவார்கள்.

தாய் மாமன் சீர்வரிசை
வசதியில்லாதவர்களே இப்படி என்றால், வசதி படைத்தவர்களின் ஆடம்பரத்தை சொல்லவே தேவையில்லை. வகைவகையான ஆடம்பரங்கள், தினுசுதினுசான நகைகள், பகட்டான சீர்வரிசைகள் போன்றவைகளை முறைப்படி செய்து பலரையும் திகைக்க வைத்துவிடுவார்கள்.
இதில் பெரிதும் ஆச்சரியங்களை கிளப்புவது தாய்மாமன் சீர் வரிசைகள்தான்.. இன்னமும்கூட நம்முடைய பாரம்பரியத்தை பறைசாற்றும்வகையில், மாட்டு வண்டிகளில் சீர்வரிசை ஊர்வலம், ஜல்லிக்கட்டு காளை உள்ளிட்ட கால்நடைகளை மணமேடையில் பரிசளிப்பது போன்ற நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது..
புதுக்கோட்டையில் ஆச்சரியம்
"தாய்மாமன் சீர்" என்றாலே, மதுரை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கே கூடுதல் விசேஷம் உண்டு.. ஆனால் தாய் மாமன் மட்டும்தான் சீர்வரிசை தர வேண்டுமா? நாங்கள் தரக்கூடாதா? என்று கேட்டு புதுக்கோட்டையில் அசத்திவிட்டார்கள் சிங்கப்பூர் முதலாளிகள்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ளது ரோஜா நகர்.. இங்கு வசித்து வரும் தம்பதி ஆறுமுகம் - தனலெட்சுமி. இந்த தம்பதிக்கு லட்சயா என்ற மகளும், தரணீஸ்வரன் என்ற மகனும் உள்ளனர்.
ஆலங்குடி ஆறுமுகம்
ஆறுமுகம் சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 20 வருடங்களாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், ஆறுமுகம் தன்னுடைய மகனுக்கும், மகளுக்கும் காதுகுத்தும் விழா நடத்த திட்டமிட்டார். இதற்கான ஏற்பாடுகளை தடபுடலாக செய்த ஆறுமுகம், தன்னுடைய முதலாளிகளான ஷ்யாம், ஆல்பர்ட் மற்றும் எஸ்தர் ஆகியோருக்கும் அழைப்பிதழ் தந்து, காதுகுத்து விழாவில் கலந்து கொள்ள வருமாறு அழைப்பு விடுத்தார்.
நீண்ட கால அதாவது 20 வருடங்கள் தங்களிடம் பணிபுரியும் ஊழியர் என்பதால், ஆறுமுகம் பத்திரிகை வைத்ததுமே சிங்கப்பூர் முதலாளிகள் விழாவுக்கு வருவதாக சொல்லி விட்டார்கள்.
அதன்படி, ஆலங்குடியில் உள்ள தனியார் மண்டபத்தில் ஆறுமுகத்தின் பிள்ளைகளின் காதுகுத்து விழாவுக்கு 3 பேருமே வந்திருந்து சிறப்பித்தனர்.. ஆனால் முதலாளிகளை போல அல்லாமல், ஆறுமுகத்தின் பிள்ளைகளுக்கு தாய்மாமன்களை போல வந்திருந்தனர்.
இதற்காக ஆறுமுகம் தன்னுடைய சிங்கப்பூர் முதலாளிகளை வரவேற்கும் வகையில் சாரட் வண்டி, குதிரை வண்டிகளை ஏற்பாடு செய்திருந்தார்.. மேள தாளங்கள் முழங்க அவர்களை வரவேற்றார்.. இதையெல்லாம் வியப்புடன் 3 முதலாளிகளும் கண்டு மகிழ்ந்தனர்.
சிங்கப்பூர் தாய்மாமன்கள்
தமிழர்களின் பாரம்பரிய முறைப்படியே தாய்மாமன் சீர்களை சுமந்து வந்தனர்.. இவர்களின் மடியில் ஆறுமுகத்தின் பிள்ளைகள் உட்கார வைக்கப்பட்டு அவர்களுக்கு காது குத்தப்பட்டது...
முதலாளிகள் தாய்மாமன்களாக மாறி சீர் செய்ததையும், இவர்களை தடபுடலாக வரவேற்று ஆறுமுகம் செய்த ஏற்பாடுகளையும் கண்டு அந்த ஊர் மக்களே ஆச்சரியப்பட்டு போனார்கள்.. இந்த நிகழ்வின் வீடியோ, இணையத்திலும் வெளியாகி காண்போரை நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது. ஆறுமுகத்தின் மகன், மகளுக்கு மட்டுமல்லாமல், சிங்கப்பூர் தாய்மாமன்களுக்கும் இணையவாசிகள் பாராட்டையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications