ஆடு திருடிய கும்பலால் எஸ்எஸ்ஐ பூமிநாதன் படுகொலை .. வழக்கின் தீர்ப்பு செப்.29 க்கு ஒத்திவைப்பு
புதுக்கோட்டை: ஆடு திருடர்களால் எஸ்எஸ்ஐ பூமிநாதன் கொலை செய்யப்பட்டு 3 பேர் கைதான வழக்கில் புதுக்கோட்டை நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குவதாக கூறப்பட்ட நிலையில் இந்த வழக்கு வரும் 29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி இரவு 2 மணிக்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக சென்ற ஆடுகளுடன் இரு சக்கர வாகனத்தை தடுத்து நிறுத்த முயன்றபோது அவர்கள் நிறுத்தாமல் வேகமாக சென்றனர்.

இதனால் அவர்கள் ஆடு திருட்டு கும்பல் என்பதை அறிந்த பூமிநாதன் அவர்களை துரத்தி சென்ற போது இருவர் பூமிநாதனை படுகொலை செய்தனர். இது தொடர்பாக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளியை தேடி வந்தனர். வாகனம் பயணித்த இடங்களில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆராய்ந்தனர்.
அப்போது ஒரு இடத்தில் திருடர்கள் மின்னல் வேகத்தில் சென்றதும் அவர்களை பிடிக்க பூமிநாதன் துரத்துவதும் பதிவாகியிருந்தது. இந்த நிலையில் இரு சிறுவர்கள் உள்பட 4 பேரை போலீஸார் அடுத்த நாளே கைது செய்தனர். விசாரணை நடத்தப்பட்ட 6 பேரின் செல்போன்களை ஆய்வு செய்த போலீஸார் அவர்களில் யாருடைய செல்போன் சிக்னல் கடைசியாக பூமிநாதன் ரோந்து செய்த இடத்திற்கும் அவர் கொல்லப்பட்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் இடத்திற்கும் இடையே இருந்தது என்பதை ஆய்வு செய்தனர்.
அதன்படி 4 பேரது செல்போன்கள் மேற்கூறிய இடத்தில் இருந்தது கண்டறியப்பட்டது. இதை வைத்துதான் கொலையாளிகளை போலீஸார் கைது செய்தனர். இந்த 4 பேரில் 10 வயது சிறுவனும் இருந்ததால் அவரை சிறுவர் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர். இவர்கள் அனைவரும் தஞ்சை மாவட்டம் கல்லணையை அடுத்த தோகூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.
இந்த வழக்கு புதுக்கோட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதாக இருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு வரும் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications