புதுக்கோட்டையில் போதை மாத்திரை 'கள்' குடித்த 40 பேருக்கு உடல் நலம் பாதிப்பா? நடந்தது என்ன?
புதுக்கோட்டை: கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 68 பேர் பலியான நிலையில் அதேபோன்று ஒரு சம்பவம் புதுக்கோட்டையில் நடந்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின. புதுக்கோட்டை ஆலங்குடி அருகே போதை மருந்து கலந்த கள் குடித்த 40-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் இது தொடர்பாக புதுக்கோட்டை காவல்துறையினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், 40க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக்குறைவு என்பது வதந்தி என்றும், கள் குடித்த 9 நபர்கள் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளதாகவும், அவர்கள் நலமுடன் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம்
கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாகுளம் பகுதியில் விஷச்சாராயம் குடித்ததில் 68 பேர் உயிரிழந்தனர். தமிழகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை இந்த சம்பவம் ஏற்படுத்தி இருந்தது.
சட்ட விரோதமாக கள்ளச் சாராயம் விற்பனை நடந்ததாகவும், அதனை வாங்கி குடித்த பலருக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டன. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்கள். அங்கு பலர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். மொத்தம் 68 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்து. இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் உள்பட பலரும் திமுக அரசை விமர்சித்து இருந்தன.
புதுக்கோட்டையில் 40 பேருக்கு உடல்நலக்குறைவு?
இந்த நிலையில் அதேபோன்று ஒரு சம்பவம் புதுக்கோட்டையில் நடந்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின. அதாவது புதுக்கோட்டை அருகே ஆலங்குடி பகுதியில் போதை மாத்திரை கலந்த கள் குடித்த 40-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகவும், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் பரவின.
இந்த நிலையில் புதுக்கோட்டை அருகே போதை மாத்திரை கலந்த கள் குடித்தவர்களுக்கு உடல்நல குறைவு என பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என புதுக்கோட்டை காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
புதுக்கோட்டை காவல்துறை விளக்கம்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி 4 உட்கோட்டம், வடகாடு காவல் சரகத்திற்குட்பட்ட மேலப்புள்ளான்விடுதி பகுதியில் போதை மாத்திரை கலந்த கள் குடித்த நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 40 நபர்களுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், வெளியான சமூக வலைதள செய்தி தொடர்பான விசாரணையில், கள் குடித்த 9 நபர்கள் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.
அனைவரும் தற்போது நல்ல நிலையில் உள்ளனர். மேலும் அனுமதியின்றி கள் விற்பனை செய்தது தொடர்பாக 3 நபர்கள் மீது வடகாடு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவ்வழக்கு சம்மந்தமாக விசாரணை நடைபெற்று வருகின்றது. எனவே சமூக வலைதளங்களில் போதை மாத்திரை கலந்த கள் குடித்து 40 நபர்களுக்கு உடல்நலகுறைவு ஏற்பட்டுள்ளதாக பரவும் வதந்திகளை நம்பவேண்டாம் என்று தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications