வயக்காட்டு போர்வெல் உள்ளே அண்ணியை புதைத்த கொழுந்தன்.. புதுக்கோட்டையே ஷாக்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே பெண்ணை கொன்று ஆழ்குழாய் கிணற்றில் புதைத்த கொழுந்தனை போலீசார் கைது செய்தனர். என்ன காரணத்திற்காக கொலை செய்தார் என்று விசாரித்த போது, அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்தது.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையை அடுத்த ஆவூர் அருகே உள்ளது ஆம்பூர்பட்டி. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவருக்கு 42 வயதில் சேவியர் , 38 வயதில் ராயப்பன் என 2 மகன்கள் உள்ளனர் . ஆரோக்கியசாமி பெயரில் இருந்த சொத்துகளை அண்ணன், தம்பி இருவரும் சரிசமமாக பிரித்து தங்களது பெயருக்கு மாற்றி எழுதிக்கொண்டார்கள்.

இதில் சேவியரின் தம்பி ராயப்பனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். அதேநேரம் ராயப்பனின் அண்ணன் சேவியருக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு சேவியர் இறந்துவிட்டார். இதைத்தொடர்ந்து சேவியர் மனைவி ஆரோக்கியமேரி (37) தனது கணவர் பெயரில் இருந்த சொத்துகளை தனது பெயருக்கு மாற்றி இருக்கிறார்.
அதன்பின்னர் ஆரோக்கியமேரிக்கும், ராயப்பனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அப்போது உனக்கு தான் குழந்தை இல்லையே, எதற்கு என் அண்ணன் பெயரில் இருந்த நிலத்தை உன் பெயருக்கு மாற்றினாய். அதனால் உன்னை கொலை செய்யாமல் விடமாட்டேன் என்று அவரை ராயப்பன் அடிக்கடி மிரட்டி வந்தாராம். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ஆரோக்கியமேரி திடீரென காணாமல் போனார்.
பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வந்தார்கள். இதனிடையே, நேற்று காலை ஆரோக்கியமேரியின் வயல் அருகே காட்டுப்பகுதியில் மூடப்படாமல் திறந்த நிலையில் இருந்த ஆழ்குழாய் கிணற்றில் புதிதாக மண் போட்டு மூடி இருந்தது. இதை பார்த்து சந்தேகம் அடைந்த உறவினர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பொக்லைன் எந்திரத்தின் மூலம் ஆழ்குழாய் கிணற்றை தோண்டி பார்த்துள்ளார்கள்.
அப்போது அங்கு ஆரோக்கியமேரி கொலை செய்யப்பட்டு உடல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் உடலை போலீசார் குழியில் இருந்து வெளியே எடுத்து பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினார்கள்.
விராலிமலை போலீசார் நடத்திய விசாரணையில், மாட்டு பொங்கல் அன்று இரவு 7 மணியளவில் வயலில் இருந்த ஆரோக்கியமேரியை, ராயப்பன் அடித்துக் கொலை செய்து உடலை அவரது டிராக்டரில் வைத்து எடுத்து சென்றுள்ளார்.
பின்னர் உடலை எங்கு புதைக்கலாம் என்று யோசித்தவர், அங்கிருந்து 100 மீட்டர் தூரமுள்ள காட்டுப்பகுதியில் உள்ள ஆழ்குழாய் கிணற்றில் புதைத்து விட்டு பின்னர் டிராக்டரை வீட்டில் நிறுத்திவிட்டு அங்கிருந்து தலைமறைவாகி உள்ளார். இதை விசாரணையில் கண்டுபிடித்த விராலிமலை போலீசார், மணப்பாறை பகுதியில் பதுங்கியிருந்த ராயப்பனை அதிரடியாக கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications