கலெக்டர் எனக்காக கார் கதவை திறந்தார்.. கவிதா ராமுவை வாழ்க்கையில மறக்க மாட்டேன்! பூரிக்கும் தபேதார்
புதுக்கோட்டை: பணி ஓய்வுபெற்ற தன்னை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு காரின் கதவை திறந்து தன்னை அமர வைத்து வழியனுப்பிய நிகழ்வு தன் வாழ்நாளில் மறக்கவே முடியாது என முன்னாள் தபாதார் அன்பழகன் தெரிவித்து உள்ளார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருந்து தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ள கவிதா ராமு, இம்மாத தொடக்கத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற தபேதார் அன்பழகனை தனது காரின் கதவை திறந்து வீடு வரை வழியனுப்பி பரிசுப்பொருட்கள் வழங்கிய நிகழ்வு பலரை நெகிழ வைத்தது.

இந்த நிலையில் இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ஓய்வுபெற்ற தபேதார், கவிதா ராமுவின் செயலை கண்டு பூரித்துபோயுள்ளார். அவர் பேசுகையில், "என்னுடைய முழு பெயர் அன்பழகன். காலையில் நான் வணக்கம் சொல்லும்போது, 'அன்பு பாய் பாய்' என்று சொல்வார். அலுவலகத்தில் அன்பு என்று அவர் பேசும்போது பூரிப்பாக இருக்கும்.
இந்த பணியை எப்படி செய்ய வேண்டும் என்பதை அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாக நான் தெரிந்துகொண்டேன். அதற்கு ஏற்ப நான் சிறப்பாக பணியாற்ற மாவட்ட ஆட்சியர்கள் உதவினார்கள். என்னுடன் பணியாற்றிய ஊழியர்கள் ஒத்துழைப்பு வழங்கினார்கள். இந்த பணியில் இருந்து நான் ஓய்வுபெறும் சமயத்தில் எனக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் இந்த அளவுக்கு மரியாதை கொடுப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தவர்களிலேயே நான் பணியாற்றி ஓய்வுப்பெறும்போது எனக்கு கிடைத்த மாவட்ட ஆட்சியர்போல் இனி வேறு யாருக்கும் கிடைக்கப்போவது இல்லை. இவரைபோல் அன்பை செலுத்துபவர் வேறு யாரும் இல்லை. இந்த மாவட்ட ஆட்சித் தலைவர் எனக்கு கொடுத்த மரியாதையை என் மனதளவில் மறக்க மாட்டேன்.
அவரது குடும்பத்தினரும் எனக்கு அந்த அளவுக்கு ஒத்துழைப்பு அளித்தார்கள். இவ்வளவு சிறப்பாக எனக்கு பெருமை சேர்த்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு என்றென்றும் நான் நன்றிக் கடன்பட்டு உள்ளேன். கோரிக்கை வைப்பதற்காக மக்கள் பார்க்க வருவார்கள். அதை நான் அவரிடம் சொல்லும்போது கொஞ்சம் நேரம் இருக்க சொல்லுங்கள், நாம் பார்ப்போம் என்று சொல்வார்.
அதன் பிறகு அவர் சொல்லும் ஆறுதலை பொதுமக்கள் கேட்டு ஏற்றுக்கொள்வார்கள். அந்த காரில் என்னை அமர வைத்து, அதே காரில் அவரும் பயணித்து, என் இல்லம் வரை வந்து இறக்கிவிட்டார். அவர்களை அழைத்து என் வீட்டில் அமர வைத்தேன். என் வீட்டிலேயே அவர் உணவருந்தினார். இப்படிப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரை நாம் கடைசி நேரத்தில் பெற்று இருக்கிறோம் என்று நினைத்தாலே பெரிய மன திருப்தி ஏற்படுகிறது.

என்னிடம் மட்டுமல்ல.. அங்கு பணியாற்றக்கூடிய அனைவருடனுமே அன்பை செலுத்துவார். அவர்களின் குடும்பத்தாரையும் கேட்பார். அங்கு பணியாற்றுபவராக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் என்ன கோரிக்கை வந்தாலும் உடனே அதை செய்துகொடுக்க சொல்வார். இதுவே அவரது வழக்கம். எனக்கு மிகப்பெரிய பூரிப்பாக இருந்தது.
இப்படியெல்லாம் ஒரு நிகழ்வு நடக்குமா என்று நான் நினைத்து பார்க்கவில்லை. இதை செய்த மாவட்ட ஆட்சியருக்கும், மற்ற பணியாளர்களுக்கும் நன்றியை தெரிவிக்கிறேன். மாவட்ட ஆட்சித் தலைவர் வாகனத்தில் என்னை ஏற்றி அமர வைத்தது என் வாழ்நாளில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம்.












Click it and Unblock the Notifications