மின் மீட்டருக்கும் மாத வாடகை.. மின்வாரியம் வீசிய "குண்டு".. டெல்லிக்கே கிளம்பறாராமே.. யார்னு பாருங்க
புதுக்கோட்டை: தமிழகத்தில் மின் இணைப்பு மீட்டர்களுக்கு மாதம் ரூ.60 வீதம் 2 மாதங்களுக்கு ரூ.120 வாடகையை வருகிற செப்டம்பர் மாதம் முதல் வசூலிக்க மின்சார வாரியம் முடிவு செய்துள்ளதற்கு வணிகர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளது.
வீடுகளில் மின் பயன்பாட்டை அளவிடப் பயன்படும் மின் மீட்டருக்கு மாதந்தோறும் ரூ.60 மின் கட்டணம் வசூலிக்கவும் அதன்படி இரண்டு மாதத்துக்கு ஒரு முறை ரூ.120 மின் மீட்டருக்கான வாடகையாக வசூலிக்க தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின்சார வாரியம் அனுமதி கேட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகியிருந்தது.

டிஜிட்டல் மீட்டர்: இந்த பரிந்துரைக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்குமாயின், செப்டம்பர் மாதம் முதல் இரண்டு மாதத்துக்கு ஒரு முறை 120 ரூபாயை மின் மீட்டருக்கான வாடகையாக செலுத்தும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், இந்த கட்டணமானது, டிஜிட்டல் மீட்டர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா, முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்..
குற்றச்சாட்டு: அத்துடன், கடந்த ஓராண்டில் 2 முறை மின் கட்டணம் உயர்ந்ததால் சாமானிய மக்கள், வணிகர்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தி உள்ளதாகவும் விக்கிரமராஜா குற்றஞ்சாட்டி உள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் செய்தியாளர்களிடம் விக்கிரமராஜா பேசியதாவது:
தமிழகத்தில் மின் இணைப்பு மீட்டர்களுக்கு மாதம் ரூ.60 வீதம் 2 மாதங்களுக்கு ரூ.120 வாடகையை வருகிற செப்டம்பர் மாதம் முதல் வசூலிக்க மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது. இதை வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கடுமையாக கண்டிக்கிறது.. இந்த ஒரு வருடத்தில் மட்டும் 2 முறை கரண்ட் பில்லை உயர்த்தியிருக்கிறார்கள். இதனால், சாமானிய மக்கள், வணிகர்கள் போன்றோருக்கு பெரும் சுமையை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது.
நிதியமைச்சர்: எனவே, ஜிஎஸ்டி துறையில் அமலாக்கத்துறையை அனுமதிக்க கூடாது என்பதை வலியுறுத்தியும், அதிகபட்ச 28 சதவீத வரியை குறைக்க வலியுறுத்தியும் தென் மண்டலம் சார்பாக தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநில வணிக நிர்வாகிகள் மத்திய நிதியமைச்சரை, செப்டம்பர் 5-ந் தேதி சந்தித்து முறையிட முடிவு செய்யப்பட்டுள்ளது..

சாமானிய வணிகர்கள், சிறு, குறு வியாபாரிகளை பாதுகாத்திடும் வகையில் தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும். பிளாஸ்டிக் பைகள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டு இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்து வருவதை அரசு அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும். அதனை விடுத்து வணிகர்கள் மீது வழக்கு போடுவது நியாயமற்றது. அறந்தாங்கி, திருவாரூர் வழியாக காரைக்குடி வரை தினசரி ரெயிலை இயக்க தெற்கு ரெயில்வேயை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வலியுறுத்த உள்ளோம்" என்றார்.
நிர்மலா சீதாராமன்: இதனிடையே, விக்கிரமராஜா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.. அதில், "ஜிஎஸ்டி சார்ந்த வழக்குகளை அமலாக்கத் துறை விசாரிக்க அனுமதிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும், அதிகபட்சமாக 28% சதவீதம் வரி விதிப்பதைக் குறைக்க வலியுறுத்தியும், தென்மண்டலம் சார்பாக தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா கர்நாடகா உள்ளிட்ட வணிகநிர்வாகிகள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை செப்.5-ம்தேதி நேரில் சந்தித்து முறையிட இருக்கின்றோம்" என்று அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications