இந்தியா சத்திரம் கிடையாது! உச்சநீதிமன்றம் கறார்! மனிதநேயத்திற்கு புறம்பாக இருக்கிறது - திருமாவளவன்
புதுக்கோட்டை: வெளிநாடுகளிலிருந்து வரும் அகதிகளுக்கு இந்தியா ஒன்றும் சத்திரம் கிடையாது என்று உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. இந்த கருத்து மனிதாபிமானத்திற்கு புறம்பாக இருப்பதாக திருமாவளவன் விமர்சித்திருக்கிறார்.
தஞ்சம் புகும் மக்களை வரவேற்கவும் அவர்களுக்கு உரிய அடைக்கலத்தையும் தர வேண்டும் இது அரசாங்கத்தின் கடமை என்றும் திருமாவளவன் கூறியுள்ளார்.

புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், "நாடாளுமன்றத்தை விட உச்சநீதிமன்றம் அதிகாரம் வாய்ந்ததா? என்கிற கேள்வியை பாஜக தொடர்ந்து எழுப்பி வருகிறது. பல்கலைக்கழக மசோதாக்கள் தொடர்பான தீர்ப்பின்போது, மாநிலங்களவை தலைவரும், நாட்டின் குடியரசுத் துணை தலைவரும் ஆவேசமாக உச்சநீதிமன்றத்தை விமர்சித்திருந்தார்.
மறுபுறம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் தீர்ப்பு தொடர்பாக உச்சநீதிமன்றத்திற்கு 14 கேள்விகளை எழுப்பியிருந்தார். இதன் மூலம் உச்நீதிமன்றம் அதிகாரம் வாய்ந்ததா? நாடாளுமன்றம் அதிகாரம் வாய்ந்ததா? என்கிற கேள்வியை எழுப்பி வருகிறார்கள். இந்த விஷயத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, பி.ஆர். கவாய், மிகச்சரியாக இதற்கு விடையளித்திருக்கிறார். உச்சநீதிமன்றம், நாடாளுமன்றம் என எதுவாக இருந்தாலும் அரசியலமைப்புதான் இதற்கெல்லாம் மேலானது என சுட்டிக்காட்டியிருக்கிறார்.
கவாய் கருத்தை, விசிக வரவேற்று பாராட்டுகிறது. அரசியலமைப்பு சட்டம்தான் அனைத்து அதிகாரங்களையும் நமக்கு வழங்குகிறது. புதிய இந்தியாவை கட்டமைக்க நமக்கு அரசியலமைப்புதான் உதவுகிறது. நிர்வாகத்துறை, நீதித்துறை உள்ளிட்டவை எப்படி இயங்க வேண்டும்? உள்ளிட்டவை குறித்து வழிகாட்டுதல்களை வழங்கு்ம அரசியலமைப்புதான் அனைத்தை விடவும் உயர்ந்தது, மேலானது. இதனை பாஜக அரசு புரிந்துக்கொள்ள வேண்டும்.
குடியரசுத் தலைவரை தங்களது கைப்பாவையாக பயன்படுத்த கூடிய வகையில் இன்றைய ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். இது மிகுந்த கவலையளிக்கிறது.
இலங்கை தமிழர் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் தற்போது வழங்கியுள்ள தீர்ப்பில், 'பிற நாடுகளிலிருந்து இங்கு வருபவர்களுக்கு இடம் கொடுக்க இந்தியா ஒன்றும் சத்திரமல்ல' என சொல்லியிருப்பது, மனிதாபிமானத்திற்கு புறம்பானதாக இருக்கிறது. புலம் பெயர்வது உலகம் எங்கும், எல்லா நாடுகளிலும் நிகழக்கூடிய ஒன்று. இலங்கையிலிருந்து மட்டுமே புலம்பெயர்த்தல் நடப்பதில்லை.
ஆக உலகம் எங்கும் நடக்கும் புலப்பெயர்வை நாம் சட்டம்போட்டு தடுக்க முடியாது. நாடுகளின் எல்லைகளை கொண்டும் இதை தடுக்க முடியாது. தஞ்சம்புகும் மக்களை வரவேற்கவும், அவர்களுக்கு உரிய அடைக்கலததை தருவதும் மனிதாபிமானத்தின் அடிப்படையில் அரசின் கடமையாகும். ஐநா இதற்குரிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. குறிப்பாக மனித உரிமை ஆணையம் அகதிகளின் பாதுகாப்பு குறித்து உலக நாடுகளோடு ஒப்பந்தத்தை உருவாக்கியுள்ளது.
இப்படி இருக்கும்போது இந்தியாவின் உச்சநீதிமன்றம், அகதிகளுக்கு இந்தியா சத்திரமல்ல என்று கூறியிருப்பது மனித நேயத்தின் அடிப்படையையே தகர்ப்பதாக இருக்கிறது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications