ஈபிஎஸ் - சசிகலா - தினகரன் - ஏசி சண்முகம் ஒன்றாக இணைவார்கள்.. “தலைமை ஓபிஎஸ்”.. வைத்திலிங்கம் பரபர!
புதுக்கோட்டை : எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற ஏ.சி.சண்முகம் உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைவார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் நிலவி வரும் ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதலுக்கு இடையே, இருவரும் இணைந்து செயல்பட ஓபிஎஸ் தரப்பு விருப்பம் தெரிவித்து வருகிறது. ஆனால், எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ்ஸை சேர்க்க முடியாது என முரண்டு பிடித்து வருகிறார்.
இந்த குழப்பத்திற்கிடையே, இரு அணிகளைச் சேர்ந்தவர்களும் அதிமுகவின் எதிர்காலம் என்னவாகுமோ என்ற அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். ஓபிஎஸ் அணியில் இருந்த முக்கிய நிர்வாகியான கோவை செல்வராஜ் நேற்று அதிமுகவை விட்டு விலகுவதாக ஆறிவித்தார்.
'அங்கே’ ஆரம்பிச்சது! பிளான் டிராப்.. முக்கிய புள்ளி சிக்னல்! கோவை செல்வராஜ் முடிவுக்கு பின்னணி என்ன?
ஓபிஎஸ் - ஈபிஎஸ் - சண்முகம் - துரைசாமி
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் உள்பட அனைவரும் ஒன்று சேரவேண்டும் என்பதே எங்கள் விருப்பம். மூத்த நிர்வாகி பண்ருட்டி ராமச்சந்திரன், அமைதியாக இருந்து வரும் சைதை துரைசாமி, தனிக்கட்சி நடத்தும் ஏசி சண்முகம், சசிகலா, டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அனைவரும் ஒன்று சேர்வோம். ஒன்று சேர எடப்பாடி பழனிசாமி ஒத்துழைக்கவில்லை என்றால், எடப்பாடி தனித்து விடப்படுவார். அது கூடிய விரைவில் நடக்கும்.
எடப்பாடியை ஒதுக்கி வைத்துவிட்டு
எங்களைப் பொறுத்தவரை அதிமுக விவகாரத்தில் பாஜக தலையீடு இல்லை. நாங்கள் விரும்புவது அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா விருப்பப்படி நூறு ஆண்டுகள் அதிமுக இருக்க வேண்டும், தமிழ்நாட்டை ஆள வேண்டும். அதனை நோக்கியே நாங்கள் பயணிக்கிறோம். எடப்பாடி பழனிசாமி அதிமுக ஒற்றுமையை ஏற்கவில்லை என்றால் அவரை ஒதுக்கி வைத்துவிட்டு நாங்கள் ஒன்று சேர்வோம்.
முற்றிலும் பொய் என்று சொல்லவில்லை
ஆறுமுகசாமி அறிக்கையில் ஒரு சில கருத்துகள் முரண்பாடாக உள்ளன. எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களை விட சிறந்த மருத்துவர்கள் நமது நாட்டில் யாரும் கிடையாது. அவர்கள் அறிக்கை கொடுத்துள்ளனர். ஆறுமுகசாமி அறிக்கை முற்றிலும் பொய் என்று நாங்கள் கூறவில்லை. அந்த அறிக்கை மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
கோவை செல்வராஜ் விலகல் ஏன்
கோவை மாவட்டத்தை கட்சி ரீதியாக நான்கு மாவட்டங்களாக பிரித்திருக்கிறோம். அதன் அடிப்படையில் தான் கோவை செல்வராஜ் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் எதற்காக தன்னை கட்சியிலிருந்து விடுவித்துக் கொண்டார் என்பது எங்களுக்கு
தெரியவில்லை. மீண்டும் அவரை ஒன்றிணைப்பதற்கு பேச்சுவார்த்தை தொடரும்.
ரெய்டு
எடப்பாடி அணியில் உள்ள முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதே தவிர இதுவரை குற்றப் பத்திரிக்கை பதிவு செய்யப்படவில்லை. வருமான வரித்துறை அமலாக்கத்துறை ரெய்டுகள் ஏற்கனவே வந்ததுதான். தற்போது புதிதாக ஒன்றும் வரவில்லை. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் கட்சிக்கும் சம்பந்தம் கிடையாது.
ஓபிஎஸ் தலைமை
ஆளுநருக்கு என்று சட்ட திட்டம் என்ன உள்ளதோ, அதன்படி தான் ஆளுநர் நடந்து வருகிறார். அப்படித்தான் நடக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம். ஓபிஎஸ் அணியின் பொதுக்குழு கூட்டம் விரைவில் நடக்கும் அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையில் தேர்தலை சந்திக்கும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் இருப்பார். 40 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவது உறுதி." எனத் தெரிவித்துள்ளார்.