கழுத்தை பிடித்த கணவன்.. அரிவாளால் அடித்த மனைவி.. சடலத்தை கிணற்றில் வீசிவிட்டு நாடகம்!
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் குடும்பச் சண்டையில் கணவனை அரிவாளால் அடித்து கொன்று அவரது சடலத்தை வீசிவிட்டு கணவனை காணவில்லை என நாடகமாடிய மனைவியை போலீஸார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூர் அடுத்த
போரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டிதுரை (29). இவரது மனைவி நந்தினி (23). இருவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் இந்த தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த மாதம் 20ம் தேதி முதல் பாண்டிதுரையைக் காணவில்லை என பல்வேறு இடங்களில் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தேடியுள்ளனர்.

பாண்டிதுரை மாயம்
இது தொடர்பாக பாண்டிதுரையின் தாயார் மீனாட்சி, ஆதனக்கோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து பாண்டித்துறையை தேடி வந்தனர். மேலும் இதுகுறித்து சந்தேகத்தின் பேரில் அவரது மனைவி நந்தினியிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

கழுத்தை பிடித்த கணவர்
விசாரணையின்போது கடந்த மாதம் 20ஆம் தேதி தனக்கும் தனது கணவருக்கும் கருத்து வேறுபாட்டால் சண்டை ஏற்பட்டதாகவும் சண்டையின் போது தனது கணவர் பாண்டித்துரை தன் கழுத்தை நெரிந்ததாகவும் அதனால் ஆத்திரமடைந்து அருகே இருந்த அரிவாள் எடுத்து கணவர் பாண்டிதுரையின் தலையில் அடித்ததாகவும் அதில் அவர் இறந்துவிட்டார்.

நாடகம்
இதனால் அதிர்ச்சி அடைந்த நந்தினி, கணவர் பாண்டிதுரையின் சடலத்தை வீட்டின் அருகே உள்ள உறைகேனி கிணற்றில் வீசியதாகவும் கூறியுள்ளார். மேலும் கணவரை கொலை செய்துவிட்டு நந்தினி நாடகம் ஆடியது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து நந்தினி கூறிய கிணற்றில் அழுகிய நிலையில் கிடந்த பாண்டிதுரையின் சடலத்தை கந்தர்வக்கோட்டை தீயணைப்பு துறையினர் உதவியுடன் போலீஸார் மீட்டனர்.

மனைவி நந்தினி கைது
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து பாண்டிதுரையின் மனைவி நந்தினியை கைது செய்த ஆதனக்கோட்டை போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் சம்பவ இடத்திற்கு வந்த புதுக்கோட்டை எஸ்பி நிஷா பார்த்திபன் இக்கொலை குறித்து ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட காவல் நிலைய காவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.












Click it and Unblock the Notifications