இலங்கை கடற்படை அட்டூழியம்.. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக, புதுவை மீனவர்கள் 54 பேர் சிறைபிடிப்பு
ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழகம், புதுவை மீனவர்கள் 54 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜெயலலிதா இயற்கையாக மரணமடைந்தார்.. சசிகலா மீது சந்தேகமே இல்லை.. அமைச்சர் கடம்பூர் ராஜு ஒரே போடு
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் அத்துமீறலில் ஈடுபடுவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.
மீனவர்கள் மீது தாக்குதல்
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துகின்றனர். மீனவர்களின் வலைகள் மற்றும் படகுகளை சேதப்படுத்துகின்றனர். தமிழக மீனவர்களை இலங்கை சிறையில் கொண்டு அடைக்கின்றனர்.சில நேரங்களில் மீனவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றும் அட்டூழியத்தில் ஈடுபடுகின்றனர்.
இலங்கை கடற்படை சிறைபிடித்து செல்கின்றனர்
மீனவர்கள் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வந்த போதிலும், இந்த கொடுமைகளுக்கு இதுவரை முடிவு கிடைக்கவில்லை. இந்த நிலையில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழகம் மற்றும் புதுவை மீனவர்கள் 54 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராமேஸ்வரம் மீனவர்கள்
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று காலை 500-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 1500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக்கூறி 20 மீனவர்களையும், 2 படகுகளையும் சிறை பிடித்தனர்.
மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சி
இதேபோல் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த நாகபட்டிணம் மீனவர்கள் 20 பேர், காரைக்கால் மீனவர்கள் 14 பேர் என மொத்தம் 54 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றுள்ளனர். மொத்தம் 5 படகுகளையும் அவர்கள் சிறைபிடித்து வைத்துள்ளனர். மீனவர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக இலங்கை கடற்படை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், 'யாழ்ப்பாணம் - கோவிலன் பகுதியிலிருந்து 3 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்த 14 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 படகுகளுடன் பறிமுதல் செய்யப்பட்டது.
இலங்கை கடற்படை அறிவிப்பு
மன்னார் - பேசாலை பகுதியிலிருந்து 7 கடல் மைல் தொலைவிலும், இரணைதீவு பகுதியிலிருந்து 5 கடல் மைல் தொலைவில் 20 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு பகுதியிலிருந்து 07.5 மற்றும் 08.5 கடல் மைல் தொலைவில் சட்டவிரோதமாக மீன்பிடித்த 20 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 2 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை கூறியுள்ளது.
மோடி அளித்த வாக்குறுதி எங்கே?
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படும் விவகாரத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று அண்மையில் சென்னையில் பிரதமர் மோடி கூறினார். ''இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவர்த்தை நடத்தியதாகவும், இனிமேல் இதுபோன்ற சம்பவம் தடுக்கப்படும்'' என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறி இருந்தார்.
இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பு
ஆனால் இதனையும் மீறி தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. இலங்கை மனித உரிமை மீறல் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை. அதற்கு அடுத்த நாளே மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.