அதிமுக திமுக இடையேதான் போட்டி.. இன்னொரு கட்சி சும்மா பேருக்கு.. ஓபிஎஸ் தொகுதியில் எடப்பாடி சரவெடி!
ராமநாதபுரம்: ஓபிஎஸ் போட்டியிடும் ராமநாதபுரம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, திமுகவுக்கும் அதிமுகவுக்கும் தான் போட்டி, மற்றொரு கட்சி ஏதோ தேர்தலில் நிற்க வேண்டும் என்பதற்காக நிற்கிறார்கள் எனக் கூறியுள்ளார்.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் ஜெயபெருமாள், திமுக கூட்டணி சார்பில் நவாஸ் கனி, பாஜக கூட்டணி சார்பில் சுயேட்சை வேட்பாளராக ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாளை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று ராமநாதபுரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் தான் போட்டி. மற்றவர்கள் ஏதோ தேர்தலில் நிற்க வேண்டும் என பெயரளவுக்குத் தான் நிற்கிறார்கள் எனக் கூறியுள்ளார். ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஓபிஎஸ் போட்டியிடும் நிலையில், அதிமுக - திமுக இடையேதான் போட்டி என எடப்பாடி பேசியுள்ளார்.
திமுக என்ன செய்தது?: பிரச்சார பொதுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "ராமநாதபுரம் மாவட்டம் விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழிலை நம்பி உள்ளது. இந்த இரண்டு தொழில்களும் செழிக்க வேண்டும் என்பதற்காக, ஏராளமான திட்டங்களை வாரி வழங்கியது அதிமுக அரசு. அதிமுக ஆட்சியில் மீனவர்களுக்காக ஏராளமான திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. மீனவ சமுதாயத்தை சேர்ந்த 3 வேட்பாளர்களை அதிமுக நிறுத்தியுள்ளது.
திமுக ஆட்சியில் ராமநாதபுரத்துக்கு கொண்டுவந்த திட்டங்கள் என்ன? ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளை நாங்கள் கொண்டு வந்தோம். ஆனால் உங்களால் 3 ஆண்டுகளில் ஒரு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொண்டுவர முடிந்ததா? நீங்கள் எல்லாம் வெற்றி பெற்று என்ன செய்யப்போகிறீர்கள்?
ஓட்டு கேட்டு வரும்போது கேளுங்க: ராமநாதபுரம் ஒரு வறட்சியான மாவட்டம், மழையை நம்பி வேளாண்மை பணிகளில் ஈடுப்பட்டுள்ள மாவட்டம் இது. இந்த மாவட்டத்தை பசுமையான செழுமையான பகுதியாக மாற்ற வேண்டும் என்று நான் எண்ணினேன். நானும் ஒரு விவசாயி என்பதால், விவசாயிகளின் கஷ்டம் அனைத்தும் எனக்கு தெரியும். எனவே, விவசாயிகளின் துன்பம் களையப்பட வேண்டும் என்பதற்காக ரூ.14,000 கோடியை மாநில நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்து காவிரி - குண்டாறு திட்டத்தைக் கொண்டு வந்தது அதிமுக.
நான் முதல்வராக இருந்தபோது கொண்டு வந்த காவிரி - குண்டாறு திட்டத்தை புதுக்கோட்டையில் தொடங்கி வைத்தேன். முதல்கட்டமாக ரூ.700 கோடி ஒதுக்கப்பட்டது. பிரமாண்டமான கால்வாய் கட்டப்பட்டது. 6000 கன அடி தண்ணீரை அந்த கால்வாயின் வழியே ராமநாதபுரம் வரை கொண்டு வருவதற்காக அமைக்கப்பட்டது அதிமுக ஆட்சியில்தான்.
தமிழகத்தில் விவசாயிகளுக்காக இத்தனை கோடி நிதி ஒதுக்கீடு செய்தது கிடையாது. விவசாயிகள் மற்றும் ராமநாதபுரம் மக்களின் நலன் கருதி இத்திட்டத்தைக் கொண்டு வந்ததது அதிமுக அரசு. ஆனால், இந்த திட்டத்தையும் திமுகவினர் முடக்கிவிட்டார்கள். அவர்கள் உங்களிடம் வாக்கு கேட்டு வரும்போது கேளுங்கள், எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட காவிரி குண்டாறு திட்டத்தை ஏன் முடக்கினீர்கள் என்று கேளுங்கள்.
இவங்களுக்கா உங்க ஓட்டு?: இந்த திட்டத்தை செயல்படுத்தியிருந்தால், இப்பகுதியில் வைகையில் தண்ணர் கரை புரண்டு ஓடியிருக்கும். ஏரி, குளங்கள் நிரம்பி நிலத்தடி நீர்மட்டம் உயரும். காவிரி - குண்டாறு திட்டம் நிறைவேற்றப்படும்போது, 2 லட்சம் ஏக்கர் அளவு வேளாண்மைக்கும், குடிநீரும் கிடைக்கும். இந்த திட்டத்தை முடக்கிய அரசு திமுக அரசு.
இன்று தமிழகத்தில் அதிமுக ஆட்சி இருந்திருந்தால், அந்தத் திட்டம் முழுமை பெற்றிருக்கும். இப்பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு காவிரி தண்ணீர் கிடைத்திருக்கும். அதை தடுத்து நிறுத்தியது திமுக அரசும், முதல்வர் ஸ்டாலினும்தான். இவர்களா நன்மை செய்வார்கள்? இவர்களுக்கா நீங்கள் வாக்களிக்கப் போகிறீர்கள்?
ஓட்டு வாங்க பாஜக நாடகம்: 1974-ல் மத்தியில் காங்கிரஸ் கட்சியும் மாநிலத்தில் திமுகவும் ஆட்சியில் இருந்தபோது மத்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தது. அப்போது தமிழகத்தை ஆண்ட முதல்வர் இதனை கண்டுகொள்ளவில்லை. இதனால் மீனவ மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அத்துடன், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.
இந்த நிலை மாற கச்சத்தீவை மீண்டும் பெற வேண்டும். அப்போதுதான் மீனவர்களின் பிரச்சனை தீரும். ஆரம்பத்தில் இருந்து இன்று வரை கச்சத்தீவை மீட்க தொடர்ந்து போராடி வரும் ஒரே கட்சி அதிமுக. 2014ல் மத்தியில் பாஜக ஆட்சியின்போது கச்சத்தீவை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என ஜெயலலிதா கடிதம் எழுதினார். நேரில் சந்தித்தும் வலியுறுத்தினார். 10 ஆண்டுகளாக மீனவர்களின் துன்பங்களை பாஜக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. மீனவர்களின் வாக்குகளை பெற இப்போது கச்சத்தீவை பற்றி பாஜக பேசி வருகிறது.
பாஜக சும்மா பேருக்கு போட்டி: தமிழ்நாட்டில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையேதான் போட்டி. ஒரு கட்சி ஏதோ தேர்தலில் நிற்க வேண்டும் என்பதற்காக நிற்கிறார்கள். போட்டியில் இருக்கும் 2 கட்சிகளில் முன்னணியில் இருப்பது அதிமுகதான். எம்ஜிஆர் மக்களுக்காக அதிமுகவை தொடங்கினார். எப்போதுமே மக்களைப் பற்றி சிந்திக்கும் கட்சி அதிமுக. ஆனால் ஒரே ஒரு குடும்பத்துக்காக நடத்தப்படும் கட்சி திமுக. திமுகவினர் சிறுபான்மையினரை ஆதரிப்பவர்கள் அல்ல, அவர்கள் சந்தர்ப்பவாதிகள்" என்று பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications