ராமநாதபுரத்தில் ஜீவனாம்சம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய மனைவி.. போலீஸ்கார கணவருக்கு வந்ததே ஆத்திரம்
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் ஜீவனாம்சம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய மனைவிக்கு போலீஸ்கார கணவரால் என்னாச்சு தெரியுமா? கணவன் மனைவி குடும்ப பிரச்சனையில் கணவன் ஆவேசமாக செய்த ஆவேசமான செயலால் தற்போது சிறையில் இருக்கிறார்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பகுதி எமனேசுவரம் சிலோன் காலனியைச் சேர்ந்த ரமேஷ் பாபு என்பவருடைய மகன் நாகேந்திரன் . இவருக்கு 33 வயது ஆகிறது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை இடையூர் சங்கேந்தி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கும், பரமக்குடியைச் சேர்ந்த சர்மிளா (23) என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு கல்யாணம் நடந்தது.

நாகேந்திரன், தனது மனைவி சர்மிளா உடன் அவரது அப்பா அம்மா உடன் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வந்தார். நாகேந்திரனின் அப்பா அம்மா உடன், சர்மிளாவுக்கு பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து கணவர் வேலை பார்க்கும் ஊரில் சென்று சர்மிளா தனியாக வாழ்ந்தார். பின்னர் பிரசவத்திற்காக சர்மிளா பரமக்குடியில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு வந்திருக்கிறார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தையை கணவர் நாகேந்திரனும், அவரது குடும்பத்தினரும் பார்க்க வரவில்லை.
பின்பு பெரியவர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி சர்மிளாவை மீண்டும் குழந்தையுடன் கணவர் நாகேந்திரன் பணியாற்றி வரும் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால் அங்கு கணவன் - மனைவி இருவருக்கும் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. இதனால் சர்மிளா குழந்தையுடன் புறப்பட்டு, பரமக்குடியில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு வந்து விட்டார்.
அதைத் தொடர்ந்து தனக்கும், குழந்தைக்கும் ஜீவனாம்சம் கேட்டு காவலரின் மனைவி சர்மிளா பரமக்குடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் வரும் 27-ம்தேதி நாகேந்திரன், நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் நாகேந்திரன், விடுமுறையில் பரமக்குடி எமனேசுவரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு வந்திருக்கிறது. அப்போது அவருக்கு நீதிமன்றம் மூலம் அனுப்பப்பட்ட சம்மன் கிடைத்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த காவலர் நாகேந்திரன் நேற்று முன்தினம் இரவு கையில் அரிவாளுடன் சர்மிளா வீட்டிற்கு ஆவேசமாக சென்றுள்ளார்.
அங்கு அவர் சர்மிளாவுடன் சண்டையிட்டு தான் வைத்திருந்த அரிவாளால் தலை, கைகள், கழுத்தில் சரமாரியாக வெட்டினாராம். சர்மிளாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். உடனடியாக இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பரமக்குடி நகர் போலீசார் சம்பவ இடத்திறகு விரைந்து வந்து அங்கேயே நின்றிருந்த நாகேந்திரனை மடக்கி பிடித்தார்கள்.
படுகாயம் அடைந்த சர்மிளா மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து சர்மிளாவின் தாயார் வசந்தி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நாகேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications