12 மணி நேரம் நடந்த பரபர சோதனை..திமுக பிரமுகர் வீட்டிலிருந்து ரூ70 கோடி மதிப்பிலான ஆவணங்கள் பறிமுதல்
ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் திமுக பிரமுகர் வீட்டில் அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனை நிறைவடைந்துள்ள நிலையில், சுமார் ரூ 70 கோடி மதிப்பிலான முக்கிய ஆவணங்களை அமலாக்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அங்காள ஈஸ்வரி கோயில் பகுதியில் திமுக பிரமுகர் வில்லாயுதம் என்பவர் வீடு உள்ளது. இவர் திமுகவின் மாவட்ட மீனவர் அணி செயலாளர் பதவியில் உள்ளார்.

இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தடை செய்யப்பட்ட கடல் அட்டையைப் பதுக்கி வைத்து, இலங்கைக்குக் கடத்த முற்பட்டதாகக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். ராமநாதபுரம் சிறையில் இவர் அடைக்கப்பட்டிருந்த நிலையில், உடல் நிலை பாதிப்பு காரணமாக இவர் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும் வில்லாயுதம் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளதாகவும் முறையாக வருமான வரி செலுத்தவில்லை என்றும் மதுரை அமலாக்கத் துறையினருக்கு ரகசியமாக புகார்கள் வந்துள்ளது.
இந்த புகார்களின் அடிப்படையில் வில்லாயுதம் வீட்டில் இன்று 10க்கும் மேற்பட்ட அமலாக்கத் துறையினர் காலை 7 மணி முதலே சோதனை நடத்தினர். வில்லாயுதத்தின் வீட்டில் மட்டுமின்றி, தங்கும் விடுதி மற்றும் குடோன் உள்ளிட்ட இடங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
காலையில் இருந்து சுமார் 12 மணி நேரம் நடந்த இந்த சோதனையில், ரூ 70 கோடி மதிப்பிலான முக்கிய ஆவணங்களை அமலாக்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications