மனைவியை ரத்த வெள்ளத்தில் துடிக்க.. துடிக்க.. கொடூர கணவனின் வாக்குமூலம்.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே மனைவியை அடித்துக் கொலை செய்து வீட்டுக்கு முன்பே புதைத்துவிட்டு நாடகமாடிய கணவனை காவல் துறையினர் கைது செய்த நிலையில், கிராம மக்கள் சூழ்ந்து கொண்டு அந்த நபரை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரம் அருகே உள்ள ஏரக்காடு பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், தனலட்சுமி விவாகரத்து கோரி தர்மராஜிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு ஒருகட்டத்தில் முற்றிய நிலையில், தர்மராஜ் தனலட்சுமியின் தலையில் பலமாக சுத்தியலால் தாக்கியுள்ளார்.

இதில், சம்பவ இடத்திலேயே தனலட்சுமி ரத்த வெள்ளத்தில் துடிக்க துடிக்க இறந்துள்ளார். கொலை செய்துவிட்டு வீட்டின் முன்பே குழி தோண்டி தனலட்சுமியின் உடலை புதைத்துள்ளார். அந்த இடத்தில் தடயம் தெரியக் கூடாது என்பதற்காக தர்மராஜ் தண்ணீர் ஊற்றியுள்ளார்.
இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் தர்மராஜுக்கும், தனலட்சுமிக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில், தனலட்சுமியைக் காணவில்லை என காவல் நிலையத்தில் தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து, போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்த போது தர்மராஜ் குளித்துக் கொண்டிருந்துள்ளார். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், தனது மனைவி தனலட்சுமி வெளியே சென்றிருப்பதாகக் கூறி நாடகமாடியுள்ளார்.
முன்னுக்குப் பின் முரணாக தர்மராஜ் பேசியதால் சந்தேகமடைந்த காவல் துறையினர் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில், தனலட்சுமியை சுத்தியலால் தலையில் அடித்துக் கொலை செய்ததாகவும், வீட்டிற்கு முன்பே குழி தோண்டி புதைத்ததாகவும் ஒப்புக் கொண்டுள்ளார்.
இதையடுத்து, தர்மராஜை சம்பவ இடத்துக்கு போலீஸார் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கிருந்த பொதுமக்கள் திடீரென தர்மராஜை சரமாரியாக தாக்கத் தொடங்கினர். தர்மராஜை அவர்களிடம் இருந்து காப்பாற்றிய போலீஸார் வட்டாட்சியர் முன்னிலையில் தனலட்சுமியின் உடலை புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து தோண்டி எடுத்தனர்.
அப்போது, அந்த குழியை தோண்ட தோண்ட தனலட்சுமியின் உறவினர்களின் அழுகுரல் அதிகரித்துள்ளது. அப்போதுதான் கிராம மக்களுக்கு தனலட்சுமி கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து தர்மராஜை சூழந்த கிராம மக்கள் அவரை சரமாரியாகத் தாக்கினர். தொடர்ந்து, தனலட்சுமியின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக போலீஸார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தர்மராஜ், தனலட்சுமி தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், தற்போது இருவரும் பெற்றோர் இல்லாமல் நிற்கதியாக நிற்பது அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications